புதன், 14 பிப்ரவரி, 2018

நான் தான்டா குமார்.exe

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் மூன்றாவது பகுதி இது. முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே. இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே உயிரியல் (பயாலஜி) பிடிக்காது. எனவே பதினொன்றாம் வகுப்பிலேயே பொறியியல் தான் என முடிவெடுத்து கணினி பிரிவை தேர்ந்தெடுத்தேன். சில பேர் உயிரியல் எடுத்தால் மருத்துவத்திற்கும் போகலாம், பொறியியலுக்கும் போகலாம் என்பார்கள். கூடவே நாசமாகவும் போகலாம் என்பதை வாகாக மறைத்து விடுவார்கள். எனவே தம்பிரான் புண்ணியத்தில் அவர்களிடம் சிக்காமல் கணினி பிரிவைத் தேர்ந்தெடுத்து பின்னர் அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறை பயில ஆரம்பித்தேன். நண்பனின் சகோதரன் ஒருவரிடம் இந்த கல்லூரியில் சேர முடிவு செய்து விட்டேன் என்றேன். அவர் உடனே, அந்த காலேஜா, அதுவும் ஐ.டி. டிப்பார்மெண்டா? அது ரொம்ப ஸ்டிரிக்ட் ஆன டிப்பார்ட்மெண்ட் ஆச்சேபா. சாயந்திரம் குரூப் ஸ்டடிலாம் வெக்கிறாங்கனு என் பிரெண்டு சொன்னான் என்றார். என்னடா அது, பொறியியல் கல்லூரி, அதுவும் அரசு கல்லூரியில் இப்படியெல்லாமா இருக்கும் என வியந்து கொண்டே சேர்ந்தேன். ஆனால் எதிர்பார்த்தது போல மாலை சிறப்பு வகுப்புகள் எதுவும் இல்லை. என்ன காரணம் என சீனியர் ஒருவரிடம் கேட்டபோது, அதுவா, போன வருஷம் வரைக்கும் அந்த கருமம்லாம் இருந்துச்சு. நம்ம டிப்பார்ட்மெண்ட்ல ஒரு மேடம் இருகாங்க. பயங்கர டெரர் அவங்க. அரியர் கொடுக்கறதுல ஸ்பெஷலிஸ்ட். (நாட்டுல எதுலலாமோ ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார்கள், இப்படியும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என நினைத்துக் கொண்டேன்.) அவங்க தான் இத ஆரம்பிசாங்க. நம்ம பசங்க சும்மா இருப்பாங்களா, கடுப்பாகி ஸ்பெஷல் கிளாஸ் கம்ப்யூட்டர் லேப்ல நடக்கும் போது ஹார்ட் டிஸ்க திருடிட்டாங்க. அதுவே 1 ஜி.பி ஹார்ட் டிஸ்க்தான். அதுக்கே அந்த அம்மா அந்த குதி குதிச்சு, ஸ்பெஷல்  கிளாஸ்லாம் கேன்சல் பண்ணி கிளாஸ்ல எல்லாரையும் பெயில் பண்ணி விட்டிருச்சி என ரத்தின சுருக்கமாக கதையை சொன்னார். என்னடா இது ரொம்ப பயங்கராமான துறையா இருக்குமோ என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப் போக தான் வேடிக்கையே.

ஜி.டி நாயுடுவுக்கு பிறகு அறிவாளிகளே பிறக்கவில்லை எனும் குறையை போக்க எங்கள் துறையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். (கவனிக்க எல்லோரும் அல்ல). என்னடா இவன் ஆசிரியரையே குறை சொல்கிறான் என எண்ண வேண்டாம். பின்வரும் சம்பவத்தை படித்தால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். எங்கள் கல்லூரி பேராசிரியர்களை முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக பல்வேறு மாணவர்கள் தங்கள் வழிகாட்டியாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் எல்லாம் எங்களை விட பெரும்பாலும் 10-15 வயது மூத்தவர்களாக இருப்பர்கள். ஏற்கனவே ஆசிரிய அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். சில பருவங்களில் எங்களுக்கு இவர்களே பாடம் எடுப்பார்கள். எங்கள் இறுதி ஆண்டு செயல் திட்டத்திற்கு (புராஜெக்ட்) இவர்களில் சிலர் வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள். அப்படி ஒருவர் தான் எங்கள் குழுவிற்கு வழிகாட்டியாக வந்தார். சரி முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்கிறவர், இவர் நமக்கு வழிகாட்டியாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எண்ணினோம். முதல் நாள் எங்கள் குழுவை அழைத்து பேச ஆரம்பித்தார். 

இப்போ பாத்துகிட்டீ ங்கனா தம்பி, நம்ம சுத்தி நிறைய டேட்டா இருக்கு, அது எல்லாத்தையும் ஸ்டோர் பண்ற அளவுக்கு நம்மளுக்கு இடம் இல்லை. அதனால டேட்டா கம்பிரஷென்ல நீங்க பிராஜெக்ட் பண்ணீங்கனா நல்லா இருக்கும்.

சரி சார். (ஆஹா, ஆரம்பம் நல்லா இருக்கே)

இந்த மாதிரி டேட்டா கம்பிரெஷன்ல நான் நிறைய பிராஜெக்ட் பண்ணிருக்கேன். இப்போ உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா கூகிளையே நாம கம்பிரெஸ் பண்ணலாம்.

என்னது! கூகிளையே கம்பிரெஸ் பண்ண போறோமா, அப்படினா இந்த தடவ பெஸ்ட் ப்ரஜெக்ட் அவார்டு நமக்கு தான். அப்புறம் அப்படியே மைக்ரோசாப்ட்ல வேலை, ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு டஃப் கொடுக்கறோம் என நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும் போதே

இந்த G-O-O-G-L-E இருக்குல, இத G-O^2-G-L-E அப்படினு எழுதினா அவ்ளோ தான், கூகிள கம்பிரெஸ் பண்ணியாச்சு என்றார்.

கனவு கோட்டைகள் எல்லாம் தவிடு பொடியாகி, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது பாடல் பிண்னணியில் ஒலிக்க ஆரம்பித்தது வேறு கதை. இதை சொல்ல வந்தது எதற்கு என்றால் இப்படியாகத் தான் இருந்தது லட்சணம் எங்கள் துறையில். சந்தை தேவைகளுக்கும் நாங்கள் படிக்கும் பாடங்களும் இடையே ஒரு பசிபிக் பெருங்கடலே இருந்தது. எனவே நாங்கள் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் சீனியர்கள் புண்ணியத்திலும் மற்றும் வகுப்பில் இருந்த சில நல்லுள்ளங்களாலும் தான். அப்படிப்பட்ட நல்லுள்ளங்களில் ஒன்று தான் விஜயேந்திர குமார். கல்லூரிக்குத் தான் அவன் விஜயேந்திர குமார். எங்களுக்கு வெறும் குமார். இன்னும் சொல்லப் போனால் கொக்கி குமார்.

கொக்கி குமார் - பெயர் மட்டும் தான் இவ்வளவு பயங்கரமாக இருக்கும். ஆள் பரம சாது. விளக்குமாறில் இருக்கும் ஒற்றை குச்சியை விட ஒல்லியானவன் (இதெல்லாம் நீ சொல்ற பார்த்தியா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது). டார்வினின் பரிணாம வரலாற்றில் ஏற்பட்ட பிழை என்று இவனை சொல்லலாம். மனிதனா வேறு ஏதேனும் ஜந்துவா என்று எங்களுக்கே பல சமயங்களில் யோசனை வந்ததுண்டு. ஏன் என்றால் இவ்வளவு ஒல்லியாக இருந்தாலும் பேய் தீனி தின்பான். அதுவும் எங்கள் விடுதி உணவை. நாங்களெல்லாம் டேய் இன்னைக்கு மெஸ்ல தோசை, எப்படியும் கண்றாவியா தான் இருக்கும், வெளிய போய் சாப்பிடலாம் என்றால், அப்படியா சொல்றீங்க, 5 தோ சை சாப்பிட்டேன் ஒண்ணும் தெரில. சரி எப்படியும் நீங்க வெளில சாப்பிட போறீங்கல துணைக்கு வரேன் என்பான்.

மேலும் ஒவ்வொரு வகுப்பிலும் பஞ்சிங் பேக் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கும். வடிவேலுவைப் போல எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அந்த கதாப்பாத்திரம். எங்களுக்கு அந்த கதாபாத்திரம் இந்த கொக்கி குமார். வாத்தியர்கள் மேல் கடுப்பு என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம், நாங்கள் பரீட்சை சரியாக எழுதவில்லை என்றாலும் இவனுக்கு தான் அடி விழும். ஒரு கட்டத்தில் போர் அடிக்குது என்றால் இவனை கூப்பிட்டு அடிப்போம். அவ்வளவு அடியையும் சிரித்துக் கொண்டே வாங்கிக்கொண்டு, டேய் அடிக்காதீங்கடா, வலிக்குது என்பான். வலிச்சா ஏன் நாயே சிரிக்குற என்றால், அது என்னமோ தெரிலடா நீங்க அடிச்சா ஒரே சிரிப்பா வருது என்பான். அதற்கும் சேர்த்து அடி விழும்.

ஆள் வெகுளியும் கூட. கல்லூரி இரண்டாம் ஆண்டில் அப்போது தான் கணினி விடுதி அறைகளுக்குள் வர ஆரம்பித்தது. எங்கள் அறையிலும் ஒரு கணினி இருந்தது. இவன் ஒரு முறை வந்து, டேய் கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனும், பாஸ்வேர்ட் சொல்லுங்க என்றான். நான் சொல்லமுடியாது என்றேன். சோகமாக சென்று விட்டான். இப்படியே பல தடவை வந்து கேட்டிருக்கிறான், நானும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றே சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மிகவும் நொந்து போய், டேய் நீங்களும் யூஸ் பண்ணல, ஆஃப் ஆகி தான இருக்கு, நான் யூஸ் பண்ண பாஸ்வேர்ட் சொன்னா என்னடா எனக் கேட்டான். சரி பயலை ரொம்ப அலைய விட்டோம், இனிமேலும் அலைய விட வேண்டாம் என்று, இம்முறையும் பாஸ்வேர்ட் சொல்லமுடியாது என்றோம். கடுப்பாகி விட்டான். அப்புறம் அவனைக் கூப்பிட்டு பாஸ்வேர்டே 'சொல்லமுடியாது' தான். 'sollamudiyathu'. இப்படி எவனாவது கேப்பான், அவனை வெறுப்பேத்தலாம்னு தான் அந்த பாஸ்வேர்ட் வெச்சிருந்தோம், வசமா நீயே சிக்குன என்று மேலும் இரண்டு அடி போட்டோம். சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டேன்.

ஆள் இவ்வளவு வெகுளி என்றாலும் கோட் அடிப்பதில் புலி. எவ்வளவு கடினமா ன கான்செப்ட்டாக இருந்தாலும் அநாயசமாக கோட் அடித்து விடுவான். மூன்றாம் நான்காம் ஆண்டுகளில் கோட் சம்பந்தமாக எந்த குழப்பம் என்றாலும் இவனிடம் கேட்கலாம் என்ற நிலைமை இருந்தது. ஒரு நாள் யூட்யூபில் கவுண்டமனி செந்தில் வீடியோ ஒன்று பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் கவுண்டமனியை ஒவ்வொருவராக அடித்து விட்டு, நான் நாயர், நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன், நான் தேவர் நான் அடிச்சா இரத்தம் வருதானு பார்த்தேன் என ஒவ்வொருவராக அடித்து விட்டு போவார்கள். இதைப் பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு கேள்வி, இந்த குமார் பயல நாம அடிச்சா மட்டும் தான் வலிக்க மாட்டேங்குதா, இல்லை ஊரே சேர்ந்து அடிச்சாலும் வலிக்காதா என்று யோசித்தோம். சரி ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்தால் கோர்த்து விட்டு பார்ப்போம் என்று இருந்தோம்.

மூன்றாம் ஆண்டு கல்லூரி விடுதியில் கிட்டதட்ட எல்லோர் அறையிலும் ஒரு கணினியாவது இருந்தது. பெரும்பாலும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன்படுத்தி வந்தார்கள். அதனால் வைரசும் எக்கச்சக்கமாக இருந்தது. நாங்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என இரண்டையுமே பயன்படுத்தி வந்ததால் முடிந்த அளவு எங்கள் கணினியைக் காப்பாற்றி வந்தோம். அப்போது வந்த வைரஸ்களுள் மிகப் பிரபலமானது New Folder.exe என்ற வைரஸ். இது கணினியில் சென்றவுடன் எல்லா கோப்புறைகளிலும்(Folders)  சென்று அதே பெயரில் உட்கார்ந்து கொள்ளும். உங்கள் கணினியில் 1000 கோப்புறைகள் இருந்தால், இந்த வைரஸ் அதே பெயரில் மேலும் ஒரு 1000 காலியான கோப்புறைகளை உருவாக்கி விடும். வெகு சீக்கிரமே உங்கள் கணினி மெதுவாக வேலை செய்யும். ஹார்ட் டிஸ்க் முழுவதையும் அழித்துவிட்டு முதலிலிருந்து ஆரம்பிப்பது மட்டுமே ஒரே வழி.

அந்த New folder.exe வைரைஸை லினக்ஸ் மெஷினில் போட்டு ஆராய்ந்து பார்த்தோம். பெரிய சிக்கல் இல்லாத கோட் தான். அதையே கொஞ்சம் மாற்றி, கோப்புறையின் பெயருக்கு பதிலாக 'நான் தான்டா குமார்' (Naan thaanda kumar) என எல்லா கோப்புறைகளிலும் வருமாறு செய்து விட்டோம். பின்பு வழக்கம் போல பல பென் டிரைவ்கள் மூலம் அந்த வைரஸ் விடுதியின் சகல கணினிகளும் பரவி விட்டது. எல்லா கணினிகளிலும் Naan thaanda kumar என்ற பெயரில் ஏகப்பட்ட கோப்புறைகள் இருக்கவே அனைவருக்கும் ஏக கடுப்பு. முகம் தெரியாத ஒருவன் நம்மை ஏமாற்றினால் பெரிய கோபம் வராது. அதே நமக்கு தெரிந்த எவனோ ஒருவன் என்றால் செம கடுப்பு வரும் இல்லையா, அதே போல தான் ஆயிற்று. ஒட்டு மொத்த விடுதியும் எவன்டா அந்த குமார் என்று சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை யதே ச்சையாக வேறு ஒரு அறையின் செல்லும் போது உள்ளிருந்து மிகுந்த கோபத்துடன் ஒரு குரல், எந்த நாய்டா அந்த குமாரு, காலைல கண்ண தொறந்தாலே அவன் பேர்ல இருக்கற ஃபோல்டர தான் பாக்க வேண்டி இருக்கும், தக்காளி அவன் மட்டும் என் கைல கிடைச்சான்..... எங்கள் ஆபரேஷன் வெற்றியடைந்த திருப்தி எங்களுக்கு. 

இந்த தகவல் குமாருக்கும் தெரிய வர அவன் நேரே எங்கள் அறைக்கு தான் வந்தான். டேய், உண்மைய சொல்லுங்க, நீங்க தான இந்த வேலை பார்த்தது என்றான். என்னங்க சிவாஜி இப்படி பண்ணிட்டாங்க படு பாவி பசங்க போன்ற ஒரு ரியாக்‌ஷனை கொடுத்தோம். கண்டுபிடித்து விட்டான். டேய், நடிக்காதீங்கடா, நீங்க தானு தெரியும். ஏன்டா இப்படி பண்ணீங்க என்றான். அந்த கவுண்டமனி வீடியோ வரலாறை சொல்லி, நம்ம டிப்பார்ம்ணட் பசங்க அடிச்சா மட்டும் தான் உனக்கு வலிக்காதா, இல்லை மத்த எல்லா டிப்பார்ட்மெண்ட் பசங்க அடிச்சாலும் வலிக்காதானு கண்டுபிடிக்க தான் என்றோம். அடப்பாவிகளா, ஒரு அப்பாவி உசுர வெச்சு விளையாடிட்டு இருக்கீங்களே என்றான். ஆனாலும் அப்பவும் பெரிய கவலை எல்லாம் இல்லை. சிரித்துக் கொண்டே தான் இருந்தான்.

ஒரு வழியாக எல்லா விடுதி மாணவர்களுக்கும் அந்த குமார் யார் என தெரிந்து விட்டது. கொலை வெறியோடு எல்லோரும் இருக்கையில், சிக்கினால் சின்னாபின்னமாகி விடுவான் என்று பரிதாபப்பட்டு நடுவில் புகுந்து சமாதானம் பேச சென்றோம். இந்த பாருங்கபா, ஏதோ ஆர்வக்கோளாறுல நம்ம பையன் இப்படி பண்ணிட்டான். உங்க வீட்டு பிள்ளையா அவன மன்னிச்சு அடிக்காம விடுங்க. இதுக்கு பதிலா, அவனே உங்க எல்லா சிஸ்டத்தையும் பார்மேட் பண்ணி, புது விண்டோஸ் ஓஸ் அவனே இன்ஸ்டால் பண்ணி கொடுப்பான், என்ன சரி தான என அவனை கேட்காமலே பஞ்சாயத்தில் வாக்கு கொடுத்து விட்டோம். மற்றவர்களும், சரி எப்படியும் பார்மேட் பண்ண வேண்டிய சிஸ்டம், இவனே பண்ணிக் கொடுக்கறான், நல்லது தானே என சரியென்றார்கள். குமார் மட்டும் எங்களையே மிகத் தீவிரமாக முறைத்து கொண்டிருந்தான். விடு மச்சி, இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும், உனக்கு நம்ம ஹாஸ்டல்லயே சிலை வெப்பாங்க என்றோம். மயிரு, குறைஞ்சது 100 சிஸ்டத்துக்காவது ஃபார்மேட் அடிக்கனும். அரைமணி நேரம்னு வெச்சாகூட 1 மாசம் ஓடிடும்டா என்றான் பாவமாக. விடுறா, வீரர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம், தியாகம் தான் உன்னை உயர்த்தும் குமாரு என்று இரண்டு அடி போட்டு அனுப்பி வைத்தோம்.

ஒன்றரை மாதங்கள் கழிந்து ஒரு வழியாக விடுதியில் உள்ள அனைத்து கணினிகளையும் சரி செய்து விட்டான். ஒரு நாள் எங்களது அறைக்குள் எதற்காகவோ வந்தான். அவன் வந்ததை கவனிக்காதது போல நான் எனது அறைத் தோழனிடம், மச்சி, குமார் தான்டா கெத்து.exe அப்படினு ஒரு புது வைரஸ் ஹாஸ்டல்ல பரவுதாமே கேள்விப்பட்டியா என்றேன். அடேய்களா நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்ல, உங்களை கொன்னுட்டு தான்டா மறு வேலை என மிக ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து கொண்டிருந்தான். வழக்கம் போல இரண்டு அடி போட்டு அவனை அனுப்பி வைத்தோம் என நான் சொல்லி தான் உங்களுக்குப் புரிய வேண்டுமா என்ன :)


3 கருத்துகள்: