சனி, 25 ஏப்ரல், 2015

இணைய போராளி (Internet Rebel) ஆவது எப்படி ?

இணைய போராளி ஆவது எப்படி ?

இணைய போராளி ஆவதற்கு முன்னால், இணைய போராளியின் விளக்கத்தை தெரிந்து கொள்வோம். இணைய போராளி என்பவன்(ள்) எல்லா விஷயத்திற்கும் கருத்து சொல்பவராகவும், கலாச்சாராத்தைக் காப்பவராகவும், கிரிக்கெட் மேட்சில் மட்டும் மிக தீவிர தேசியவாதியாகவும் (கவனிக்க ஐ.பி.எல் அல்ல), அவ்வப்பொழுது திராவிடனாகவும், அவ்வப்பொழுது பச்சை தமிழனாகவும் மாறக்கூடியவராகவும் இருக்க வேண்டும். வாங்கும் சம்பளத்தில் அரசாங்கத்தை ஏமாற்றி வீட்டு வாடகையை ஏற்றி போடுபவராகவும், மெடிக்கல் பில் கொடுப்பவராகவும், தான் மட்டும், பஸ்ஸில் வாங்கிய டிக்கட்டை பஸ்ஸின் உள்ளேயோ அல்லது ரோட்டிலோ வீசி எறிந்து விட்டு, ஸ்வச் பாரத் திட்டத்தை கிழித்து தொங்க விடுபவராகவும் இருக்க வேண்டும். இன்னும் பல "வேண்டும்"கள் இருக்கின்றன. எனவே அனைவரும் நினைப்பது போல் அவ்வளவு சாதாரணமாக ஒரு இணைய போராளி ஆகி விட முடியாது. இதற்கு தேவை குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும். ஆனாலும் பின்வரும் செய்முறையை தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால் நீங்களும் ஆகலாம் இணைய போராளி.

தேவையான பொருட்கள் :

1) பிட் வீடியோ டவுன்லோட் செய்யும் அளவிற்கு இண்டெர்நெட் வசதி
2) ஒரு பேஸ்புக் கணக்கு
3) ஒரு வாட்ஸாப் கணக்கு
4) ஒரு ட்விட்டர் கணக்கு

முதலில் அரசியல் :

இணைய போராளிக்கு கிஞ்சித்தும் அரசியல் ஞானம் இருக்க கூடாது. அரசியல் ஒரு சாக்கடைபா என்ற பொதுவான எண்ணம் இருக்க வேண்டும். தப்பி தவறியும் ஓட்டு போடக் கூடாது. தேர்தல் அன்னைக்கு மேனேஜர் லீவு தரலபா என்று சமாளிக்க வேண்டும். ஊரே சேர்ந்து ஏதாவது அரசியல்வாதியை இணையத்தில் திட்டிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தோடு கோவிந்தாவாக நாமும் திட்ட வேண்டும். மோடி வெளிநாடு போனாலும் திட்ட வேண்டும், மன்மோகன் சிங் போகவில்லை என்றாலும் திட்ட வேண்டும். நமக்கு விளைவுகளா முக்கியம் ? புரட்சி தான் முக்கியம்.

இலவசம் தரும் அரசாங்கத்தை சரமாரியாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் திட்ட வேண்டும். ஆனால் நமது வீட்டில் அரசாங்கம் தரும் அனைத்து இலவச பொருட்களும் இருக்க வேண்டும். யாராவது கேட்டால், நம்ம பணம் தானேபா என்று வியாக்கியானம் பேச போராளிகள் மறக்க கூடாது. சில பல ஒன் லைன் ஜோக்குகள் அரசியல்வாதிகளை வைத்து வைத்து எழுதி கூட்டம் சேர்க்க மறக்க கூடாது.

அடுத்ததாக சினிமா :


பேஸ்புக்கில் அஜித்- விஜய் வெறியர்கள் போன்ற‌ ஏதாவது ஒரு குழுவில் மெம்பராக இருத்தல் அவசியம். லைக் ஃபார் அஜித் கமெண்ட் ஃபார் விஜய் போன்ற நாட்டுக்கு தேவையான போஸ்ட்களில், கமெண்ட் அல்லது லைக் போடும் பூரா பயலுகளும் நாமாக இருத்தல் அவசியம். எந்த சினிமா வந்தாலும் விமர்சனம் எழுத வேண்டும். படம் பார்த்தாலும் சரி பார்க்காவிட்டலும் சரி. முக்கியமான விஷயம், படத்தை பற்றி டெக்னிக்கலாகவோ அல்லது வேறு ஏதும் தளங்களிலோ அலசுதல் நம்மைப் போன்ற போராளிகளுக்கு அழகல்ல. நமக்கு பிடிக்காத நடிகர் படம் என்றால் "காட்டு மொக்கை ஜீ" என்றும் பிடித்த நடிகர் படம் என்றால் "தா... செம மாஸ், இப்போ வாங்கடா" என்று விமர்சனம் போட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும்.

கூட்டம் சேர்க்க இன்னொரு முக்கியமான விஷயம், நம்மைப் போன்ற சக போராளிகளின் போஸ்ட்களில் லைக் போட்டு அவர்களுக்கு சொறிந்து விடுதல் அவசியம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அப்புறம் இலக்கியம் :

இது ஒவ்வொரு இணைய போராளிக்கும் முக்கியமான கட்டம். இங்கு தான் நாம் அனவரும் ஒரு இண்டெலெக்சுவல் என்பதை ஊருக்கு அறிவிக்கும் நேரம். எந்த புத்தக கண்காட்சி வந்தாலும், அங்கு நிற்கும் முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும். புத்தகம் வாங்குவது போல 4-5 செல்பி எடுத்து போட்டு லைக்குகள் அள்ள வேண்டும். இணைய போராளிக்கு முக்கியமான பண்பே எந்த புத்தகத்தையும் படிக்காமல் இருப்பது தான், அதுல தான் மச்சி கெத்து. நாங்கள்லாம் ஸ்கூல்  புஸ்தகத்தையே படிக்காதவங்க என்று காலர் தூக்கி விட்டு ஆதித்யா டிவி பார்க்க சென்று விட வேண்டும். மேலும் எந்த இலக்கியவாதி காலம் ஆனாலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் முதல் ஆளாகவும் நாம் தான் இருக்க வேண்டும். சில அட்வான்ஸ்ட் இணைய போராளிகள், உயிரோடு இருக்கும் சில இலக்கியாவாதிகளுக்கு அஞ்சலி எழுதி வைத்து இருப்பாதாக கேள்வி. கவனிக்க.

இந்தியா :

இதில் 2 வகையான இணைய போராளிகள் உண்டு. 2 ஐயும் பார்த்து விட்டு எந்த குழுவில் சேர்வது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

குரூப் 1 - ரட்சகன் குரூப் :

இந்தியா மீது வெறித்தனமான பற்று ஆன்லைனில் மட்டும் இருக்க வேண்டும். உலகத்தில் எந்த மூலையில் எவன் எதை கண்டு பிடித்தாலும், கி.மு 4000 லேயே இந்தியாக்காரன் இதை கண்டு பிடித்து விட்டான் என மகாபாரதம் மேற்கோள் காட்ட வேண்டும். நேதாஜி, பகத் சிங் என்று எவர் பிறந்த நாள் வந்தாலும் ( அது உண்மையான பிறந்த நாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, எவனோ ஒரு சக போராளி ஆரம்பித்து வைப்பான் இன்று இவர் பிறந்த நாள் என்று), ரத்தம் தெறிக்கும் அளவுக்கு ஸ்ட்டேடஸ் இருக்க வேண்டும். முக்கியமாக காந்தியை கிழித்து தொங்க விட வேண்டும். அப்போ தான் மச்சி திரும்பி பார்ப்பாங்க. அதற்கு காந்தி சுயசரிதையோ அல்லது இந்திய வரலாறோ படிக்க‌ வேண்டிய அவசியம் இல்லை.

குரூப் 2 - என்னத்த கண்ணையா குரூப் :

எப்போதும் இந்தியா மீது ஒரு வெறுப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நாடு தனி ஆனால் தான் உருப்படுவோம் என்று சில பல மேற்கோள்கள் காட்ட வேண்டும் , என்னது புது நாட்டிற்கு ஏற்றுமதி இறக்குமதி, பொருளாதாரம், பாதுகாப்பு இவற்றுக்கான தீர்வா ? போராளிகளான நமக்கு புரட்சி தான் முக்கியம். தனித்தமிழ்நாடு தான் அதற்கு தீர்வு. அப்புறம், பேசாம வெள்ளைக்காரனே நம்மை ஆண்டிருக்கலாம் என சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் அன்று ஸ்டேட்டஸ் போட வேண்டும். சர்ச்சையை கிளப்புனாதான் பாஸ் பிரபலம் ஆவோம்.

தமில் சாரி தமிழ் :

தமிழ் மீது வெறி இருக்க வேண்டும். பைசா நகர் கோபுரத்தையும் பெரிய கோவிலையும் கம்பேர் பண்ணி பாத்தியாடா எங்க கெத்து அப்படினு ஸ்ட்டேட்டஸ் போடனும். ரட்சகன் குரூப் போல எவன் எதை கண்டுபிடித்தாலும் அதற்கு தமிழன் தான் முன்னோடி என்று எவன் மெசேஜ் பார்வார்டு பண்ணாலும், அதை அப்படியே ஒரு நொடி கூட சிந்திக்காமல் 10-15 குரூப்பிற்கு பார்வார்டு பண்ண வேண்டும். முக்கியமான விஷயம், மனித இனத்திலேயே, தமிழர் இனம் தான் அறிவார்ந்த இனம் என்கிற திமிர் நமக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

தமிழை யாரும் காப்பாத்த மாட்டேங்கிறாங்க மச்சி என்று சொல்லிக்கொண்டே ஹாரிபாட்டர் இந்த சாப்டரில் என்ன சொல்றார் என கேட்க வேண்டும். முக்கியமாக தமிழர் புத்தாண்டு அன்று தமிழ் வெறி அளவுக்கு அதிகமாக பொங்கி வழிய வேண்டும். டைனோஸர அழிச்சதே தமிழ் இனம் தான்டா என கூச்சப்படாமல் அளந்து விட வேண்டும். அதற்கு ரெபரன்ஸாக புறநானூற்றில் உள்ள பாடலை காண்பிக்க வேண்டும். அரசாங்க பள்ளியில் ஆங்கில மீடியம் வந்தால் எதிர்க்க வேண்டும், ஆனால் நமது பையனை இண்டர்னேஷனல் ஸ்கூலில் சேர்க்க மறக்க கூடாது. நமக்கு புரட்சி தான் முக்கியம் மச்சி.

சமூகம் :
சமீபத்தில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், இணைய போராளிகளுக்கு தான் சமூகம் சார்ந்த அக்கறை அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்னது, இந்த நியூஸ்க்கு சோர்ஸ் வேணுமா ? பாஸ், இணையத்துல சோர்ஸ் கேட்குறவன் இணைய போராளியா இருக்க முடியாது. வந்த நியூஸை பார்வேர்ட் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்.

டாஸ்மாக் பத்தி தமிழ் ஹிந்து எழுதியதை விட பக்கம் பக்கமாக நாம் எழுத வேண்டும். ஆனால் நண்பன் பிறந்த நாள், பிரேக் அப் என்று எது வந்தாலும் டாஸ்மாக்கில் தான் கழிக்க வேண்டும். குடிச்சா தான் மச்சி இப்போலாம் கெத்து.


சமூகத்தின் மீதான உச்சபட்ச கருணை நமக்கு தான் இருக்க வேண்டும். எனவே பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், இந்த குழந்தையின் போட்டோவை ஷேர் செய்தால் பேஸ்புக் ஒரு டாலர் கொடுக்கும் என்று இருக்கும் எல்லா போட்டோவையும் ஷேர் செய்ய வேண்டும். சேகுவேரா சொன்னது போல அன்பின் மீது கட்டமைக்கப்படுவது தான் புரட்சி.

விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு என அந்தந்த சீசனில் எந்த செய்தி வருகிறதோ அதற்கு சப்போர்ட் பண்ணுவது முக்கியம். ஆனால் நாம் மட்டும் எப்படியவாது ஒரு லோன் போட்டு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி விட வேண்டும்.

கலாச்சாரம் :

கமல் போல கலாச்சாரம் காப்பது இன்றைய இணைய போராளியின் இன்றியமையாத கடமை. தமிழ் கலாச்சாரம் தான்டா என் உயிரு மத்தெதெல்லாம் என் ம..  என ஸ்டேட்டஸ் போட வேண்டும். ('ம' எழுத்துக்கு பிறகு கடைசியில் இருக்கும் அந்த 2 புள்ளிகளை மறவாதீர். ஏனென்றால் நம்மைப் போன்ற போராளிகள் ஆன்லைனில் மட்டும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது ). இப்படி பேசிக்கொண்டே டீச்சர் வீடியோ, போட்டோ, கௌரி வீடியோ போன்றவகளை ஷேர் செய்தல் அவசியம். யாம் பெற்ற இன்பம்.....அந்த போட்டோவில், வீடியோவில் இருக்கும் பெண்களை பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. சோர்ஸ் பார்க்காமல் ஷேர் பண்ணுபவன் தான் இணையப் போராளி.

பெண்ணியம் :

பெண்களுக்கான சுதந்திரத்திற்காக நாம் ஒவ்வொருவரும் ஆன்லைன் காந்திகளாக மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் நமக்கு, வீட்டில் பார்க்கும் அடக்க ஒடுக்கமான ஒரு 40-50 பவுன் நகை போட்டு வரக்கூடிய பெண் தான் வேண்டும். ஏனென்றால் வெளியில் ஊர் சுற்றும் பெண்கள், அல்லது காதலில் தோல்வி அடைந்த பெண்களெல்லாம் நம்மைப் பொறுத்த வரை தேவி..யா மச்சி. தாலிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், ஆனால் நமது மனைவி கண்டிப்பாக அணிய வேண்டும். ஏனென்றால் அதில் தானே நமது உயிர் அடங்கி இருக்கிறது, நாம் இல்லாவிட்டால், இந்த புரட்சியை யார் வழிநடத்த ? அதற்காகவேனும் நமது மனைவி தாலி அணிய வேண்டும். அதற்கு மேலும் யாராவது கேள்வி கேட்டால், இருக்கவே இருக்கிறது அறிவியல். அறிவியல் ரீதியாக பெண்களுக்கு தாலி அணிவது நல்லது என டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுளதை வெளிக்கொணருங்கள்.

அப்பாடா over... தொழில்நுட்பம், உலக அரசியல், கம்யூனிசம் என முக்கியமான டாபிக்குகளை விட்டு விட்டேன். ஆனால் மேற்சொன்ன டெம்ப்ளேட்டுகளை வைத்து இதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். மேலும் ஒரு முறை அழுத்தி கூறுகிறேன், சோர்ஸ் பார்க்காமல் ஷேர் பண்ணுபவன் தான் இணைய போராளி. விளைவுகளை விட புரட்சி தான் முக்கியம் என நினைப்பவன் தான் இணைய போராளி. நம்மைப் பற்றி பாராதியாரே பாடி இருக்கிறார். தேடி சோறு நிதம் தின்று என்று பாடல் வருகிறது அல்லவா, அதில் வரும் வேடிக்கை மனிதர்கள் சாட்சாத் நாமே தான். பாரதியாரே பாடிய புரட்சி போராளிகள் நாம் என காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.



இணைய போராளிகள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் !


5 கருத்துகள்: