வியாழன், 8 பிப்ரவரி, 2018

உண்மையான முருகனும், ஒரு ஹட்ச் சிம்மும்


(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் முதல் பகுதி இது. இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இந்த சம்பவம் நான் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் பொழுது நடந்தது. (இதற்கு பிறகு அடுத்த வரியை இளம்பெண்கள் படிக்காமல் அதற்கு அடுத்த வரிக்கு சென்று விடவும். மற்றவர்கள் தசாவதாரம் கமல் குரலில் தொடரவும்) இந்த கதையைச் சுருங்க சொல்வதானால் சுமார் 12 ஆண்டுகளாவது பின்னோக்கிப் போக வேண்டி இருக்கும். ஜியோவும் 4ஜியும் கல்லூரிக்குள்ளும் அதன் விடுதிக்குள்ளும் புகாத காலம். ஏர்டெல்லும் ஹட்ச் உம் மோதி விளையாட வேறொருவர் இன்றி தள்ளுபடிகள் மூலம் தம்முள் மோதிக் கொண்ட காலம். அப்போது என்னிடம் கைப்பேசி இல்லை. என்னிடம் மட்டுமில்லை கல்லூரியில் பெரும்பாலானோரிடம் கைப்பேசி கிடையாது. விடுதிக்கு அருகில் ஒரே ஒரு தொலைபேசி சாவடி இருக்கும். அதுவும் எப்பொழுதும் நிரம்பி வழியும்.

இந்நிலையில் தான் ஹட்ச் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கல்லூரிக்குள்ளேயே கடை விரித்தார்கள். அடையாள அட்டை மட்டும் கொடுத்தால் போதும், 50 ரூபாய்க்கு ஒரு சிம் கிடைக்கும். அதில் 120 ரூபாய் வரை பேசிக் கொள்ளலாம். மேலும் எதேனும் 2 ஹட்ச் எண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நிமிடத்திற்கு 10 பைசாவிற்கு பேசிக்கொள்ளலாம். சரி எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு சிம் வாங்கிக் கொண்டேன். நண்பன் ஒருவனிடம் கைப்பேசி இருந்தது. அவ்வப்பொழுது அந்த கைப்பேசியில் இந்த ஹட்ச் சிம்மை போட்டு வீட்டிற்கு பேசி விட்டு பின் சிம்மை கழட்டி விடுவேன். ஆனால் இந்த 10 பைசா திட்டத்திற்கு என்ன செய்வது? எனது வீட்டிலும் கைப்பேசி கிடையாது. சோஷலிஸ முறையில் தீவிர நம்பிக்கையுள்ள எனது தந்தை பி.எஸ்.என்.எல் தொலைபேசி தவிர வேறெந்த நிறுவனத்தையும் நம்பாதவர். கடலை போட கன்னியரோ காதலிகளோ இல்லாத காலம். எப்படி தான் அந்த 10 பைசா திட்டத்தை பயன்படுத்த என யோசித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் படித்தது அரசு கல்லூரி என்றாலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வீட்டில் சொல்வது போல விளக்கு வெச்ச பொறவு ஆரும் விடுதிய விட்டு வெளிய போக முடியாது. கிட்டதட்ட யாரிடமுமே கணிணி கூட கிடையாது. 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரே ஒரு தொலைக்காட்சி பெட்டி உண்டு. அதையும் சனிக்கிழமை இரவு பக்தி படங்களுக்குப் பிறகு சீண்டுவாரில்லை. அதனால் பொழுது போகாமல் இருக்கும் எங்களுக்காக வராது வந்த மாமணி போல திகழ்ந்தது இந்த ஹட்ச் சிம்.

நண்பர்களின் நண்பர்களுக்கு போன் போட்டு அவர்களை கலாய்க்க ஆரம்பித்தேன். உங்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி சொல்லப் போகிறேன். கிராஸ் டாக்கை கண்டுபிடித்தது புரட்சியாளர் அண்ணல் ஆர். ஜே. பாலாஜி அல்ல. அதற்கு முன்பே எங்கள் கல்லூரி விடுதியில் அந்நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இப்படி நண்பர்களின் நண்பர்களை கலாய்க்கும் போது பின்வரும் 4 விதிகளை பின்பற்றினால் எந்த தொல்லையும் இருக்காது

1) சூடு சொரணை அறவே கூடாது. எதிராளி எவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசினாலும் கோபப்படக் கூடாது. எதிராளி பேசும் ஒவ்வொரு கெட்ட வார்த்தையும் அவன் கடுப்பாகி விட்டான் என்பதை உணர்த்துகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு கெட்ட வார்த்தையும் உங்களுக்கு கிடைக்கும் ஒரு பேட்ஜ் போல.

2) நாம் யார் என்பதை கடைசி வரை சொல்லக் கூடாது. தெரிந்து விட்டால் நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

3) ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக கலா ய்க்க வேண்டும். இல்லையென்றால் நமக்கே போரடித்து விடும்.

4) முக்கியமாக சொதப்பி விட்டால் கூச்சமே படமால் போனை வைத்து விட வேண்டும். திருப்பி அந்த எண்ணுக்கு பேசவே கூடாது

இப்படியாக எங்கள் விடுதியில் ஒவ்வொருவரும் யாரையாவது வம்புக்கு இழுத்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். இதில் முக்கியமாக குறிப்பிடக் கூடியவர்களுள் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த எனது நண்பனும் இருந்தான். பெயர் தமிழ்செல்வன். மங்களகரமான பெயர். ஆனால் அவன் என்னைப் போல சாத்வீகம் இல்லை. எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தையில் தான் ஆரம்பிப்பான். ஒரு முறை ஒரு கிராஸ்டாக்கில் விடாமல் தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு கெட்ட வார்த்தையாக பேசிக் கொண்டிருந்தான். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒரு கெட்ட வார்த்தை கூட மறுபடியும் அவன் பயன்படுத்தவில்லை. தமிழில் அத்தனை கெட்ட வார்த்தைகள் இருப்பது 'கெட்ட வார்த்தை பேசுவோம்' புத்தகம் எழுதிய பெருமாள் முருகனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு முறை எனது ஹட்ச் சிம்மில் இருந்த 120 ரூபாயில் 119.20 பைசாவுக்கு பேசி தீர்த்து விட்டேன். மீதி 80 பைசா இருந்தது. ஹட்ச் அல்லாத வேறு ஒரு எண்ணுக்கு பேசினால் நிமிடத்திற்கு 1 ரூபாயாவது ஆகும். அதனால் பேச முடியாது. ஆனாலும் அந்த 80 பைசாவை விட மனமில்லை. ஒற்றைப் புல்லை வைத்து ஆராய்ச்சி செய்யும் செந்தில் போல ஆராய்ச்சி செய்ததில் ஒரு யோசனை தோன்றியது. நண்பனின் நண்பன் ஒருவன் ஹட்ச் சிம் வைத்திருந்தான். அவனுடைய எண்ணிற்கு என்னுடைய சிம் மூலம் 10 பைசா திட்டத்தை செயல்படுத்தி அவனுக்கு அழைத்தேன். அநேகமாக அது நள்ளிரவாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றாக தூங்கி கொண்டிருந்தான் போல.

"ஹலோ ராஜ்குமாரா?"

"ஆமா, நீங்க யாரு, இந்த நேரத்துல போன் பண்ணிருக்கீங்க"

"நான் யாருங்கறது முக்கியம் இல்லை, ஆனா நான் சொல்லப் போற விஷயம் தான் ரொம்ப முக்கியம்."

"......."

"எங்க காலேஜ் பக்கத்துல ஹட்ச் சிம் கடை போட்டாங்க, 50 ரூபாய்க்கு சிம் வாங்குனா 120 ரூ வா டாக்டைமா, அதனால ஒரு சிம் வாங்கினேன்."

"இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லறீங்க?"

"இருப்பா, முழுசா கேளு. 120 ரூவால 119 ரூவாய் 20 காசுக்கு நான் பேசி தீர்த்துட்டேன். இன்னும் 80 காசு தான் இருக்கு. ஆனா ஒரு கால் பண்ணணும்னா குறைஞ்சது 1 ரூவாயாவது வேணும். ஆனா வேற ஒரு ஹட்ச் சிம்முக்கு 10 பைசா ஸ்கீம ஆக்டிவேட் பண்ணா 8 நிமிஷம் பேசலாம். அதனால தான் உன் நம்பருக்கு ஆக்டிவேட் பண்ணிட்டேன். அதனால நீ என்கூட ஒரு 8 நிமிஷம் பேசிட்டு இரு."

"அடிங்..... நாயே, யாருடா நீ, என்ன கலாய்க்கிறியா?" (1 பேட்ஜ் சம்பாதித்தாயிற்று)

"மிஸ்டர் ராஜ்குமார் நான் எவ்வளோ டீசண்டா உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க என்னடானா இப்படி பேசறீங்க. இங்க பாருங்க நமக்கு இன்னும் 5 நிமிஷம் தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் இந்த சிம்மை தூக்கி போட்டிருவேன். ஏன்னா பாருங்க ரீசார்ஜ் பண்றதுக்கு பதிலா புது சிம் வாங்கினா 50 ரூவாய்க்கு 120 ரூவா டாக்டைம் கிடைக்குது."

"டேய் எந்த .....டா நீ?" (மற்றுமொரு பேட்ஜ்)

"மிஸ்டர் ராஜ்குமார் நமக்கு இன்னும் 4 நிமிஷம் தான் இருக்கு, அதுல நாம் இப்படி சண்டை போட்டுக்கணுமா? உலகம் ரொம்ப பெரிசு ராஜ்குமார், வாங்க எதாவது சந்தோஷமா பேசலாம்."

"டேய் எவனோ என் பிரெண்டுனு தெரியுது, எவன்னு சொல்லுங்கடா, ஒண்ணும் பண்ண மாட்டேன், மிட்நைட்ல இப்படி கால் பண்ணி சாவடிக்காதீங்கடா."

"என்ன பண்றது ராஜ்குமார், காலம் அப்படி கெட்டு கிடக்குது. இந்த மாதிரிலாம் சிம் கொடுத்தா என்ன பண்றது நீங்களெ சொல்லுங்க."

"டேய் பிளீஸ்டா, முடியல மொக்க போடாதீங்க"

"முடி இல்லைனா மொட்டை தான போட முடியும், எப்படி மொக்க போட முடியும்?"

"......"

"இதோ கடைசி நிமிஷத்துக்கு வந்துட்டோம் ராஜ்குமார். வேற ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?"

"டேய் யார்டா நீ? உண்மைய சொல்லு. குமார் தான?"

"ஒகே ராஜ்குமார், உங்க கூட பேசினது ஒரு நல்ல அனுபவமா இருந்துச்சு, என்னோட கடைசி 80 பைசாவ நல்லபடியா உபயோகிச்சேனு ஒரு மனதிருப்தி இருக்கு. திருப்பி இந்த நம்பருக்கெல்லாம் டிரை பண்ணாதீங்க, ஏன்னா நாளைக்கு நான் வேற சிம் வாங்கிடுவேன். 50 ரூவா சிம், 120 ரூவா டாக்டைம். பை பை!"

அறையில் இருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ராஜ்குமாரின் நண்பன், அதாவது அவனது எண்ணை எனக்கு கொடுத்த எனது நண்பன் என்னிடம், டேய் அவன் ரொம்ப பாவம்டா, அவன் கெட்ட வார்த்தை பேசி நானே பார்த்ததில்லைடா என்றான். இதெல்லாம் என்ன பெருமையா, நம்மளோட கடமை.

அதன் பிறகு எனது நண்பன் அடுத்த முறை ஊருக்கு செல்லும் போது ராஜ்குமார் அவனிடம் சோகம் கலந்த கோபத்தோடு,

"எந்த நாய்னே தெரிலடா, ஒரு நாள் நைட்டு போன் போட்டு கலாய்ச்சுவிட்டான். ஒரு ஹட்ச் சிம்முக்கு 2 நம்பரோட தான் 10 பைசா ஸ்கீம் போட முடியும், ஏற்கனவே அம்மா நம்பருக்கு போட்டிருந்தேன், இன்னொன்னு என் ஆள் நம்பருக்கு போடறதுக்குள்ள இவன் குறுக்க புகுந்திட்டான். அதானால இப்போ என் நம்பரையே மாத்திட்டேன். இவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும்..."

"சரி விடு மச்சி. உன் புது நம்பர் சொல்லு, நோட் பண்ணிக்கறேன்"

"9841....."

"என்ன மச்சி பி.எஸ்.என்.எல் நம்பரா?"

"ஆமாடா, பி.எஸ்.என்.எல் தான் எந்த காலேஜ் பையனும் வெச்சிருக்க மாட்டான். அதான்."

"சரிடா."

அதன்பிறகு எனது நண்பன் விடுதிக்கு வந்தவுடன் முதல் வேலையாக என்னிடம் ராஜ்குமாரின் புது எண்ணைக் கொடுத்தான். நானும் வேறொரு ஹட்ச் சிம் வாங்கி அவனை கலாய்க்க ஆரம்பித்துவிடேன். முதலில் கோ பமாக பேசியவன், நாளாக நாளாக கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அதன் உச்சகட்டமாக ஒரு நாள் அவனாகவே போன் செய்து பேச ஆரம்பித்தான். நானும் அவனை கலாய்த்துக் கொண்டே இருந்தேன்.

"டேய் இங்க பாரு உன்னை எதுவும் பண்ண மாட்டேன். யாரோ நீ என் பிரெண்டு தான். உன் பேரு மட்டும் சொல்லு."

"பேருல என்ன இருக்கு ராஜ்குமார். எல்லாம் நாம பண்ற செயல்ல தான இருக்கு,"

"டேய் மொக்க போடாதடா. இங்க பாரு எனக்கு ஒரு காலுக்கு ஒரு ருவா."

"அப்போ உன் ரெண்டு காலுக்கும் மொத்த மதிப்பே 2 ரூவாதானா, ஹே ஹே ஹே"

"டேய் எரிச்சல கிளப்பாத, உன்கூட 45 நிமிஷம் பேசி 45 ரூவா செலவழிச்சிருக்கேன். பேரு மட்டுமாவது சொல்லுடா"

"உனக்கு என்ன, என் பேர் தானா வேணும், முருகன்னு வெச்சுக்கோ."

"டேய் உண்மையான பேர் சொல்லுடா"

"உண்மையான முருகன்னு வெச்சுக்கோ, ஹா ஹா ஹா"

டக்!

அதன் பிறகு அவன் பேசவே இல்லை. ஹட்ச் சிம் தள்ளுபடியும் முடிந்து விட்டது. முதலாம் ஆண்டும் முடிந்தது. இரண்டாம் ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் வெளியில் சென்று வர சுதந்திரம் இருந்ததால், அதன் பிறகு இந்த போன் விளையாட்டுகளில் ஈடுபடவில்லை.

ஒரு நாள் எனது நண்பன் தலைதெறிக்க எனது அறைக்கு ஓடி வந்தான்.

"டேய் சீக்கிரமா உன் கடைசி ஆச என்னனு சொல்லு!"

"எதுக்குடா?"

"நம்ம ராஜ்குமார் இருக்கான்ல,"

"எந்த ராஜ்குமார்?"

"அதான ஒருத்தன் ரெண்டு பேர கலாய்ச்சா ஞாபகம் இருக்கும். ஊருல இருக்கற எல்லார் கிட்டயும் ஒரண்டை இழுத்தா எப்படி ஞாபகம் இருக்கும், அதாண்டா, என் பிரெண்டு, நான் கூட நம்பர் வாங்கி கொடுத்தேன்ல, ஹட்ச் சிம், அந்த 80 பைசா, அப்புறம் அந்த உண்மையான முருகன்... அவன்"

"ஆமா ஆமா, அவனுக்கு என்ன இப்போ?"

"அவன் இப்போ டிரான்ஸ்பர் வாங்கி நம்ம காலேஜுக்கே வந்துட்டான். அதுவும் நம்ம டிபார்மெண்ட். நீ செத்த, ஹே ஹே ஹே"

எனக்கு ஒரு நிமிடம் திடுக்கென்றது. (அரசு கல்லூரிகளுக்குள் முதலாமாண்டு முடிந்தவுடன் இரண்டாம் ஆண்டில் மாணவர்களும் மாற்றல் வாங்கி வரலாம்)

"சொல்றா உன் கடைசி ஆச என்ன, எப்படியும் நீ இன்னைக்கு சாகப் போற."

இந்த இடத்தில் என்னைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். வாய் இருக்கும் அளவுக்கு எனக்கு உடம்பு கிடையாது. மிகவும் ஒல்லியாக இருப்பேன். வகுப்பில் கூட என் பட்ட பெயர் கொசு. அறையில் ஆல் அவுட் வாங்கி வைத்தால் கண்டிப்பாக இவனைக் கொன்று விட்டு இவன் தொல்லையில் இருந்து தப்பி விடலாம் என மிகத் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த நண்பன் ஒருவனைத் தெரியும் எனக்கு. உடம்புக்கேற்ற வாய் இருந்திருக்கலாம். ஆனால் விதி வலியது.

மேலும் என்னைப் போல பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சகஜம் என்பதால் அவன் என்னைக் கண்டறிவதற்கு முன்னால் நானே அவனிடம் நேரடியாக சென்று பேசலாம் என முடிவெடுத்தேன்.

"இப்போ எங்கடா இருக்கன் அவன்?"

"மெஸ்ல சாப்பிட்டுட்டு இருக்காண்டா, ஏன், போய் கால்ல விழப் போறியா?"

நான் மிகுந்த மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மெஸ் பக்கம் சென்றேன். தனியாக உட்கார்ந்து ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தான் ராஜ்குமாராக இருக்க வேண்டும். தூரத்தில் இருந்தேன் அவனை நோட்டம் விட்டேன். சாதரணமாகத் தான் இருந்தான். என்னை விட பலசாலி தான். என்னை ஒப்பிடும் போது எல்லோருமே பலசாலி தான். ஆனால் தப்பி ஓடி விடக் கூடிய அளவுள்ள பலசாலி என்பது மனதுக்கு சற்று ஆறுதல் தந்தது.

"ராஜ்குமாரா?"

"ஆமா!" (குரலில் லேசான பதற்றம் தெரிந்தது. ஏனென்றால் நேரடியாக இரண்டாம் ஆண்டில் வருவதால் அவ்வளவாக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் யார் சீனியர், யார் நம் வகுப்பு என்பதிலும் குழப்பம் இருக்கும்)

"என்ன தெரியலையா?"

"சாரி, தெரியல, நீங்க யாரு?"

"நான் தாம்பா உண்மையான முருகன்!"

ஓரிரு நொடிகள் அவன் கண்களில் கொலை வெறி தெரிந்ததை கவனித்து விட்டேன். ஷெர்லாக் திரைப்படத்தில் வில்லனை அடிக்கும் முன்பு, அவனை எவ்வாறெல்லாம் அடிக்கலாம் என்று ஷெர்லாக் ஒரு முறை மனதில் ஒத்திகை நடத்துவதுண்டு. அது போ ல ஏதேனும் ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கிறானோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அவன் கண்களில் இருந்த கொலை வெறி மறைந்து குழப்பம் பரவியது. புதிய கல்லூரி, புதிய இடம், எதற்கு பிரச்சனை என்று எண்ணக்கூடிய என்னைப் போன்று ஒரு அப்பாவி என்று நினைக்கிறேன். ஆனால் அதன் பிறகு அவன் என்னிடம் பேசியதே இல்லை. நானும் அவனிடம் பேசியதே இல்லை. சண்டை என்றெல்லாம் இல்லை. இருவருக்குமே பேச தேவை இருக்கவில்லை. கல்லூரியில் உங்களோடு படித்த எல்லோரிடமுமா நீங்கள் பேசியிருப்பீர்கள், அதே போலத் தான் :)

12 கருத்துகள்:

  1. Beautifully written! First paragraph reminded me of ‘Dasavatharam’ opening voice-over. Looking forward to the next parts! ��

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks na :) Yeah, the first few minutes of Dasavatharam is one of my most favourite scenes in Tamil cinema. So it had its effect :)

      நீக்கு
  2. Elarum kulayum kurumbu thanam undu enbathu purithukonden... I thought u r silent boy.. ��bt epm dhn notorious boy inu theriyuthu mams.. Continue... Next episode epm.. ��

    பதிலளிநீக்கு
  3. Anna,the way of ur writing is quite interesting.... But ennum konjam better ah mudichurukalam... End la mudichadhu sappunnu errukku... Ennum neraiya edhir pakkuroam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sure Rajesh. Thanks a lot for your comments :) Meanwhile please read the second part too and let me know your thoughts.

      நீக்கு
  4. Arumai... Gud time pass for me to read at Bahrain airport... It's long wait transit... Leading me to my college life

    பதிலளிநீக்கு
  5. நன்றி டா.. Got chance to visualise memories of GCT through ur writings...

    பதிலளிநீக்கு