செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

முலாம் பழ ஜீஸா? சாத்துக்குடி ஜூஸா?

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் நான்காவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

எல்லா வகுப்புகளிலும் பின்வரும் வகையில் மாணவர்கள் இருப்பார்கள். முதல் வகை கடலை, காதல், குடும்பம் என ஏகபோகமாக வாழ்பவர்கள். இரண்டாவது வகை விக்கிரமாதித்தன்கள் வகை, எப்படியும் நம்மளிடமும் ஒரு பெண் பேசி விடுவாள் என்ற நம்பிக்கையில் நடமாடும் இதயம் முரளிகளாக இருப்பார்கள். மூன்றாவது வகை, சீ சீ இந்த பழம் புளிக்கும் என எந்த பெண்களிடமும் பேச மாட்டோம் என விரதம் இருப்பார்கள். இதில் முதல் மற்றும் இரண்டாவது வகையைக் கூட நம்பி விடலாம். ஆனால் இந்த மூன்றாவது வகை இருக்கிறார்களே எமகாதகர்கள். நாங்களாம் பொண்ணுங்க கூடயே பேச மாட்டோம், மாஸ்டா நாங்க என்று கம்பு சுற்றுவார்கள். ஆனால் உண்மையில் "பொண்ணுங்க கூட பேசவே மாட்டோம் (வாய்ப்பு கிடைக்கும் வரை)" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம். அப்படிபட்ட கதை தான் இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது.

எல்லா வகுப்பையும் போலவே எங்கள் வகுப்பிலும் ஒரு குழு இருந்தார்கள். பொண்ணுங்க கூடவே பேச மாட்டோம் என்பது தான் அவர்களது கொள்கை. அவர்களாகவே அவர்களுக்கு கெத்து கேங் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். நானெல்லாம் இதயம் முரளி குழு என்பதால் அவர்களோடு பெரிய ஒட்டுதல் இல்லை. என்னுடைய எதிரிகளெல்லாம் நான் முதல் வகையைச் சார்ந்தவன் என்று வாய் கூசாமல் பொய் சொல்வார்கள் மக்களே, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டும். கடமை, கண்ணியம், தட்டுப்பாடு கட்டுப்பாடு என்று வாழ்ந்தவன் நான். நானுண்டு, என் வேலையுண்டு என்று வாழ்ந்து உலக மாணாக்கர்களுக்கெல்லாம் ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவன் என்பதை இந்த இடத்திலே மிகுந்த தன்னடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். (இந்த எபிசோடுக்கு இந்த பில்டப் போதும்னு நினைக்கிறேன். இனிமேல் கதைக்குள்ள போயிடலாம்)

மூன்றாம் ஆண்டு பருவத் தேர்வு நெருங்கி வரும் சமயம் அது. வழக்கம் போல நாங்களெல்லாம் படிப்போம் என்று நம்பி ஸ்டடி ஹாலிடேஸ் அறிவித்திருந்தார்கள். ஸ்டடிக்கு ஹாலிடேஸ் விடுவது தாம்லே ஸ்டடி ஹாலிடேஸ் என்ற முன்னோர்களின் மொக்கைக்கு இணங்க விடுதியில் இருக்கும் விட்டத்தைப் பார்த்து, ஊர் கதை பேசி பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். அப்படிப்பட்ட ஒரு மங்களகரமான நன்னாளில், திடீரென்று எனது அறைக்கு மூன்று நான்கு தடிமாட்டு நண்பர்கள் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் கையில் ஒரு கைப்பேசி.

"டேய் சிவா, சீக்கிரம் இந்த போனை வாங்கி பொண்ணு குரல்ல பேசுடா."

"எதுக்குடா, புரியல.."

"டேய் அதெல்லாம் அப்புறம் சொல்றோம். அவன் லைன்ல இருக்கான். நீ பொண்ணு குரல்ல மட்டும் பேசு, மிச்ச கதையை நாங்க அப்புறம் சொல்கிறோம்."

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு முன்கதை சுருக்கம் (அதாம்பா பிளாஷ் பேக்)  சொல்லியாக வேண்டும் மக்களே, இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் ஒருவனை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருக்கிறேன். அதுவும் ஒன்றிரண்டு நாட்கள் அல்ல, 2-3 மாதங்கள். அதைப் பற்றி விரிவாக இன்னொரு பதிவு எழுத இருப்பதால், இப்போதைக்கு அந்த கதைக்குள் முழுதாக செல்ல வேண்டாம்.

சரி பெண் குரலில் தானே பேச வேண்டும் என நான் போனை வாங்கி, ஹலோ என்றேன் பெண் குரலில். அந்த முனையில் ஒரு ஆண் குரல்.

"ஹலோ, ரஞ்சனாவா?"

(நாம எந்த கேரக்டர்னே தெரியலயே, சும்மா போனை கொடுத்திட்டானுங்க தடிமாட்டு பசங்க, சரி சமாளிப்போம்)

"ஹலோ, யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்றீங்க. இனிமேல்லாம் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

அந்த தடிமாட்டு நண்பர் கூட்டம், தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.

"டேய், நல்லா மாட்டி விடலாம்னு நினைச்சோம், இப்படி சொதப்பிட்டியேடா" என்றார்கள்.

"அடேய்களா, முதல்ல இந்த கதையில் நான் யாரு, ரஞ்சனா யாருனு சொல்லுங்க. அப்புறம் தான் தெளிவா பேச முடியும்" என்றேன்.

"டேய் நம்ம சுந்தரம் இருக்கான்ல, அதாண்ட அந்த கெத்து கேங்ல இருப்பான்ல, அவன் ரொம்ப ஓவரா போறான்னு, நாங்க தான் அவன் போனல இவன் நம்பர நம்ம கிளாஸ் ரஞ்சனானு பேர் மாத்தி வெச்சிட்டோம். அப்புறம் அவனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினொம். அவனும் ரஞ்சனா தான் மெசேஜ் பண்றானு நினைச்சு ரிப்ளை பண்ண ஆரம்பிச்சுட்டான். சரி நமக்கு தான் ஸ்டடி ஹாலிடேஸ்ல பொழுது போக மாட்டேங்குதுல, அதான் இவன் கூட ரஞ்சனா பேர்ல கடலை போட ஆரம்பிச்சோம். சும்ம சொல்ல கூடாது, பய வறு வறுனு வறுத்து கடலையே தீஞ்சு போற அளவுக்கு பண்ணிட்டான். இது இப்படியே ஒரு வாரமா ஓடிட்டு இருந்ததா, இன்னைக்கு பயபுள்ள தீடீர்னு கால் பண்ணிட்டான். எங்களுக்கு என்ன பண்றதுனு தெரில. உன்னோட செகண்ட் இயர் மேட்டர் நியாபகம் வந்துச்சு, அதான் ஓடி வந்து போனை உங்கிட்ட கொடுத்தோம், இப்படி சொதப்பிட்டியேடா, இனிமே எப்படிடா நம்புவான் அவன்" என்று இவர்கள் ஒரு முன்கதைச் சுருக்கம் சொன்னார்கள்.

நான் எனது கண்ணாடியை கழற்றி துடைத்துக்கொண்டே, "கொஞ்சம் கிரிட்டிக்கலான கேஸ் தான். ஆனா புராஜெக்ட் இண்டெரெஸ்டிங்கா இருக்கதால நான் எடுத்து பண்றேன்" என்றேன்

"ஆமா. பெரியா இஸ்ரோ சயிண்டிஸ்ட் இவரு, நாயே மூடிட்டு இப்போ என்ன பண்றதுனு" சொல்லு என்று ரொம்ப கெஞ்சி கேட்டுக் கொண்டார்கள்.

"மக்களே, நம்மள மாதிரி பசங்கள பத்தி எனக்கு தெரியும். எவ்வளோ பெரிய முட்டாளுங்க நாமனு, பொண்ணு பேசுதுனு சொன்னா, மெஸ் உப்புமாவை கூட ருசியா இருக்குதேனு திம்போம். அதானால கூல் டவுன். அந்த பயலுக்கு மறுபடியும் போன் போட்டுக் கொடுங்க, இந்த புராஜெக்ட கண்டினியூ பண்ணுவோம்" என்றேன். பெண் குரலில் பேசலாம் என்று முடிவு எடுத்து விட்டேன். கிட்டதட்ட ஒரு வருடத்துக்கு பிறகு, பழைய சிவாவா பேக்ரவுண்ட் மியூசிக்லாம் போட்டு,

"ஹலோ சுந்தரமா?"

"ஆமா, நீங்க ரஞ்சனா தான?"

"ஹேய் ஆமாபா, சாரி, அப்போ போன் என் பிரெண்டு கைல இருந்துச்சா, அப்போ போன்ல வித்தியாசமா ஒரு பேர்ல கால் வந்த உடனே, என்னை கலாய்க்கிறேன்னு அவ அப்படி பேசிட்டா, சாரிப்பா" என்றேன்.

"அது பரவாயில்ல, விடு, என்ன பேர்ல ஸ்டோர் பண்ணிருக்க என் பேர?"

(மீன் கொக்கிக்குள் மாட்டி விட்டது மக்களே. இனி பயபுள்ள என்ன சொன்னாலும் கேட்கும். இப்போது போய் அவன்கிட்ட கைமாற்றாக 100 ரூபாய் கேட்டு பாருங்களேன், உடனே கிடைத்து விடும்)

"ஆங், அஸ்கு புஸ்கு, அதெல்லாம் சொல்ல முடியாது, போ"

"ஏய், சொல்லுபா, பிளீஸ்"

"போ, அதெல்லாம் சொல்ல முடியாது"

... இப்படியே ஒரு 5 நிமிடங்கள் கடலை வறுத்து தீய்வதற்குள் முடித்து விட்டேன். போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தால், போனை என்னிடம் கொண்டு வந்து கொடுத்த நண்பர் கூட்டத்தில் ஒருவனையும் காணோம். குருநாதா என்று காலுக்கு கீழிருந்து ஒரு குரல். எழுப்பி விட்டு பார்த்தால், எல்லாரும் கண்ணில் தண்ணி வச்சுண்டா. டேய், இதுக்கெல்லாமா கலங்குவீங்க, கிறுக்கு பயபுள்ளகளா ,போங்க போய் புராஜெக்ட கண்டினியூ பண்ணுங்க என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 

அதன் பிறகு இதுவே வாடிக்கையாகிப் போனது. மெசேஜில் கடலை போடுவதெல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அழைப்பு வந்தால் மட்டும் ஓடி வந்து என்னிடம் கொடுத்து விடுவார்கள். நானும் சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்று அவனோடு ஆராய்ந்து கொண்டிருந்தேன் இரவெல்லாம்.

இந்த மெசேஜ் கடலை ஒருவரிடமும், கால் பண்ணும் கடலை டிப்பார்ட்மெண்ட் என்னிடமும் இருப்பதால் சில சிக்கல்களை சந்தித்தோம். சுந்தரமோ பேசும் போது, "ஹேய் இன்னைக்கு காலைல நான் அந்த மெசேஜ் பண்ணேன்ல, நீ ஏன் அதுக்கு அப்படி ரிப்ளை பண்ண" என்பான். அடப்பாவிகளா, என்னத்தடா மெசேஜ்ல கடலை போட்டு தொலச்சீங்க, வரலாறாவது சொல்லிட்டுப் போங்களேண்டா என்று அவர்களை மனதிற்குள் திட்டி விட்டு நானும் பொதுவாகவே அந்த கேள்விக்கு பதிலளிப்பேன். கொஞ்சம் கோவம் கலந்த குரலோடு "ஏன் நான் அப்படி ரிப்ளை பண்ண கூடாதா, எனக்கு அந்த உரிமை இல்லையா" என்பேன். நமக்கு தான் பெண்களின் கோபமோ அழுகையோ பொறுக்க முடியாது அல்லவா, அவன் பம்மிவிடுவான். "ஹேய் விடுப்பா, சும்மா தான் கேட்டேன்" என்று வேறு டாபிக் போய்விடுவான். நானும் தப்பிச்சோம்டா சாமி என்று பெருமூச்சு விடுவேன்.

ஒருநாள் கல்லூரிக்கு அருகிலுள்ள கடையில் ஜீஸ் குடிக்கலாம் என்று சுந்தரத்தையும் அழைத்தோம். அப்போதும் அவன் ரொம்ப பிஸியாக ரஞ்சனாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தான். (அதாவது ரஞ்சனா என்று அவன் நம்பிக் கொண்டிருந்த எண்ணிடம் அல்லது என்னிடம்)

"டேய் படிச்சுகிட்டு இருக்கேன், இப்போ போய் டிஸ்டர்ப் பண்றீங்களேடா"

சுற்றி இருந்த எங்கள் எல்லோர் காதிலும் புகை என்று நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு, அவனை தாஜா செய்து அழைத்துச் சென்றோம். அப்போதும் அவன் கையில் போனோடு தான் கடைக்கு வந்தான். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு தேவையான ஜீஸ் சொல்லி வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டோம். இவன் மட்டும் எதுவும் சொல்லவில்லை. அப்போது தான் எங்களுக்கு உரைத்தது. சில மணித்துளிகளாக நாங்கள் ரஞ்சனாவின் போனை பார்க்க மறந்து விட்டிருந்தோம். அவனுக்கு தெரியாமல் எடுத்து பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே அவனுடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.

"ஹேய், ஜீஸ் கடைக்கு வந்திருக்கேன். முலாம் பழ ஜீஸ் குடிக்காவா, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கவா?" என்றொரு குறுஞ்செய்தி.

கூட இருந்த நண்பன் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு "தக்காளி, இன்னைக்கு அவன் செத்தாண்டா, கடைக்கு கூட்டி வந்தது நாம, இங்க இவன் அவகிட்ட கேக்குறானா", என்று பாய்ந்தான். கதை இப்படி முடியக் கூடாது அல்லவா, அதனால் அவனை அடக்கி வைத்து, அவனுக்கு புரிய வைத்தோம். 

சரி பதில் அனுப்பலாம் என்று யோசித்து, "ஹேய் அந்த கடைல முலாம் பழம், சாத்துக்குடி ரெண்டுமே நல்லா இருக்காது, ஷார்ஜா ஜீஸ்னு ஒண்ணு ஒருக்கும். அது செமயா இருக்கும். உடம்புக்கும் ரொம்ப நல்லது" என்ற பதிலை தட்டி விட்டோம். உண்மையில் அந்த கடையில் இருப்பதிலேயே மகா மட்டமான ஜீஸ் இந்த ஷார்ஜா ஜீஸ் தான். விலையும் அதிகம். மற்ற ஜீஸ் எல்லாம் 15-20 ரூபாய் என்றால், ஷார்ஜா 45 ரூபாய். இது எங்கள் எல்லோருக்குமே தெரியும். ஏன் நம்ம சுந்தரத்திற்கும் தெரியும். ஆனால் கன்னி ஒருத்தி சொல்லி விட்டாள் கண்டதையும் தின்பவர்கள் அல்லவா நம் இனம், அதனால் அவன் ஷார்ஜா ஜீஸ் தான் வாங்கி குடித்தான்.

"just had sharjaha juice. Really nice pa. Thanks for the suggestion :)" என்று குறுஞ்செய்தி வேறு. இந்த கதையைப் படிக்கும் பெண்களே, உண்மையாக சொல்கிறேன்.  ஒரு பெண்ணாக இருப்பதன் பெரும் கஷ்டத்தை அன்று தான் உணர்ந்தேன். (சில நிமிடங்கள் விக்கி விக்கி அழுகிறேன். மூக்கைத் துடைத்துக் கொண்டு..) உங்கள் எல்லோருக்கும் என் சார்பாக வீர வணக்கம் தோழிகளே!

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த கண்றாவி கடலை வளர்ந்து வந்தது. கூடவே அந்த பருவத்திற்கான தேர்வுகள் ஒவ்வொன்றாக வந்து சென்று கொண்டிருந்தது. இதற்கு மேல் இதை வளரவிட்டால் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கருதி இறுதித் தேர்வு அன்று கதைக்கு சுபம் போட்டு விடலாம் என்று பஞ்சாயத்தில் தீர்மானம் ஆனது.

உண்மையை ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து சொல்லலாம், அப்படியே நாங்களும் அன்றைய பாடு கழித்த மாதிரி ஆயிற்று என்று, இறுதித் தேர்வு முடிந்த அன்று சந்திக்கலாமா என்று கேட்டேன். ஓரளவுக்கு நல்ல விலையுயர்ந்த ஹோட்டலில் மதிய உணவுக்கு சந்திக்கலாம் என்றேன். (ஏனென்றால் இந்த மாதிரி ஹோட்டலில் நாங்கள் இப்படி சாப்பிட்டால் தான் உண்டு.)  பயலுக்கு ஏக குஷி. "வரும் போது நீ நம்ம காலேஜ் டூர் அப்போ போட்டிருந்தியே அந்த கருப்பு டிரெஸ், அதுல நீ நல்லா இருந்த, அதுல வரணும்" என்று மெசேஜ் வேறு. சனீஸ்வரா! 

கலர் கலர் கனவுகளோடு இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு அந்த ஹோட்டலுக்கு வந்து விட்டான். நாங்களும் காலையில் இருந்தே சாப்பிடாமல் இருந்து தயாராக இருந்தோம் வேட்டைக்கு. எல்லோரும் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தோம். எங்களை அவன் எதிர்பார்க்கவில்லை. சிவ பூஜையில் இந்த கரடிகள் எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே சொல்லி வைத்திருந்த படி நான் முதலில் செல்லவில்லை. மற்ற நண்பர்கள் சென்றிருந்தார்கள்.

"என்னடா இந்த பக்கம்? எங்க கிட்ட வேற எங்கயோ போறேனு சொன்ன"

"இல்லடா, இன்னையோட பரீட்சை முடியுதுல்ல, அதான் அப்படியே பிரெண்ட பார்த்துட்டு போலாம்னு..." என்று நெளிந்தான்.

ரஞ்சனாவாகிய நான் அவனை அலைவேசியில் அழைத்தேன்.

"ஏய் எங்க இருக்க, சாரிப்பா, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, வந்துட்டே இருக்கேன்".

"பரவாயில்லை, பொறுமையாவே வா, நாம நிச்சயமா இந்த ஹோட்டல்ல தான் சாப்பிடணுமா?" என்றான்.

"ஏய், அது என் பேவரிட் ஹோட்டல்பா, அங்க தான் சாப்பிடணும், ஏன்?"

"இல்லை நம்ம கிளாஸ் பசங்களாம் இங்க இருக்காங்க, அதான்" என்று இழுத்தான்.

அப்படியே நான் போன் பேசிக்கொண்டே ஹோட்டலுக்குள் நுழைந்தேன் அவன் அமர்ந்திருந்த டேபிள் அருகில் சென்றேன்.

"ஏன், தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் தெரியப் போறது தானே. சர்வர் அண்ணா ஒரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க" என்று இந்த வாக்கியத்தை சொல்லி விட்டு அப்படியே அவன் முன்னால் போய் அமர்ந்தேன். ஒரு மனிதனுக்கு ஒரே நேரத்தில் மிக சந்தோஷமான செய்தியும், மிக சோகமான செய்தியும் சொன்னால், எப்படி இருக்கும் என்று அன்று தான் கண்டு கொண்டேன். பயலுக்கு ஒரு நிமிஷம் தலை கால புரியவில்லை. லேசா சிரிக்க ஆரம்பித்தவன், நான் அவன் டேபிளில் கருப்பு சட்டையோடும் போனோடும் போய் உட்கார்ந்ததைப் பார்த்ததும் புரிந்து கொண்டான். ஹோட்டலில் இருந்த நண்பர்கள் எல்லோரும் இந்த சமயத்தில் ஹே! என்று கத்திக் கொண்டே எங்கள் டேபிள் அருகில் வந்து விட்டார்கள். ஒட்டு மொத்த ஹோட்டலும் எங்களையே பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவனை கலாய்க்க ஆரம்பித்து விட்டோம். அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

"தக்காளி டேய், இன்னைக்கு நீ தான் எங்க எல்லாருக்கும் பில் கட்டுற, அண்ணா ஒரு மட்டன் பிரியாணி" என்று ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். முதலில் அதிர்ச்சியானவன், பின்பு அவனும் எங்களைப் போல சூடு சொரணை இல்லாத ஜந்து என்பதால் அவனும் அசடு வழிய சிரிக்க ஆரம்பித்து விட்டான். இந்த ஒட்டு மொத்த நிகழ்வையும் பிற்கால சந்ததியருக்காக வீடியோ வேறு எடுத்து வைத்தோம். 

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே, சுந்தரத்தின் நெருங்கிய நண்பன், "டேய் எத வேணாலும் பொறுத்துப்பேண்டா, ஆன நாங்க கடைக்கு கூட்டி போனப்புறம் முலாம் பழ ஜீஸா, சாத்துக்குடி ஜீஸானு கேட்ட பாரு, அத மட்டும் மன்னிக்கவே மாட்டேண்டா, இதுக்காகவே, இரு... சர்வர் அண்னா இன்னொரு சிக்கன் பிரியாணி கொண்டு வாங்க. தின்னே இவன் சொத்த அழிச்சிடறோம்" என்றான். கலாய்த்து சிரித்து சாப்பிட்டு முடித்து பில் வந்தது. பயல் கிட்டதட்ட 2000 ரூபாய் தண்டம் அழுதான் அன்று மட்டும். இந்த சம்பவம் உண்மையான ரஞ்சனாவிற்கு தெரிந்து, ஏற்கனவே பெண்கள் மத்தியில் என் தலைக்கு பல லட்சங்களாக இருந்த எனது Bounty, மேலும் கூடியது. ஆனால் பொது வாழ்வு என்று வந்து விட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா.

இந்த சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்து விட்டன. கல்லூரி முடித்து நாங்கள் வேலைக்கு சேர்ந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. அப்போதும் அந்த கெத்து கேங்கில் சிலர் கெத்தாகவே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் எங்கள் வகுப்புத் தோழி ஒருத்தி அவளுக்கு கல்யாணம் என எல்லோருக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். அப்படியே கெத்து கேங்கில் உள்ள அபிலாஷ்க்கும் போன் செய்தாள். அவன் போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

10 நிமிடங்கள் கழித்து அறைக்குள் வந்து "மாப்ள, ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனுஷன கடிச்ச கதையா இந்த சிவா நம்ம கிட்டயே வாலாட்டுறான். தக்காளி 10 நிமிஷம் எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையும் போட்டு திட்டிட்டேன். இனிமே நம்ம வழிக்கே வரமாட்டான்" என்றான் பெருமிதம் பொங்க. அவனது அறைத் தோழர்கள் எல்லா ம் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்கள். "டேய், அது உண்மையாவே நம்ம கிளாஸ் பொண்ணு தாண்டா" என்று அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. அதன் பிறகு அவளுடைய கல்யா ண விஷயத்தை சொல்லி, உண்மையாகவே அவள் தான் போன் செய்தாள் என்று இவனை நம்ப வைத்து, அதன் பிறகு இவன் அசடு வழிந்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு, என அந்தக் கதை மிக சுவாரசியாமாக சென்றது. 

ஆக இந்த கதை சொல்லும் நீதி என்னவென்றால், ஒரு பெண் நமக்கு போன் செய்தால் அது பெண்ணாகத் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அது உண்மையாக ஒரு பெண்ணாகக் கூட இருக்கலாம் :)


1 கருத்து:

  1. மிக சிறந்த கதை இதில் எது உண்மை என்று நேரில் சந்திக்கும்போது !! என்ன?

    பதிலளிநீக்கு