திங்கள், 23 ஜூலை, 2018

நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் - பகுதி 1

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் எட்டாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

"இங்க பார்றா தம்பி, பத்தாவது தான் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு. ஜாலியா இருக்கலாம்." இப்படி உங்ககிட்ட சொன்னாங்களா? என் கிட்டயும் சொன்னானுவளே. சரினு நாமளும் நல்லபடியா பத்தாவது முடிச்சிட்டு வந்தா, "இங்க பார்றா தம்பி, 12 ஆவது தான் உன் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு, ஜாலியா இருக்கலாம்" அப்படினு சொன்னாங்க. சரிதான் கழுதை அதையும் படிச்சிட்டு காலேஜுக்கு வந்தா, "இங்க பார்றா தம்பி.... போதும் நிறுத்துங்க, காலேஜுல படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல வேலை வாங்கிட்டா லைப் செட்டில்டு, அதானே என்று திருப்பி கேட்க தோணியது. நாம் தான் அப்பிராணி ஆயிற்றே, மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். இவங்க சொல்ற லைப் செட்டில்டுங்கறது வண்டி இழுக்குற குதிரைக்கு முன்னால காட்டுற சாப்பாடு மாதிரி. இந்தா கிடைச்சுரும், அந்தா கிடைச்சுரும்னு பாவம் அந்த குதிரை வண்டிய இழுத்துகிட்டே ஓடும். இந்த உலக ஞானம்லாம் கிடைக்க போதி மரம்லாம் தேவை இல்லை. சரி நாம கல்லூரி வாழ்க்கைக்கு வருவோம். ஒரு வழியா ஒரு காலேஜுல சேர்ந்துட்டோம், இனிமே கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு, கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டுனு தமிழ் சினிமாவ நம்பி ஜாலியா இருக்கலாம்னு உள்ள வந்தா, வாங்க தம்பி, மொத்தம் 8 செமஸ்டர், செமஸ்டருக்கு 6 பரீட்சை, 3 யூனிட் டெஸ்ட், 2 பிராக்டிக்கல், இது போக அப்பப்போ அசைமெண்டுனு பொடனிலேயே அடிச்சு உட்கார வெச்சாங்க. நாம தான் எவ்வளவோ பாத்துட்டோமே, இதை பாக்க மாட்டோமானு வண்டி இழுக்க ஆரம்பிச்சோம்.

இதே போல காய்ந்து கருவாடாக போன வாழ்க்கையில கொஞ்சமாவது மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர்கள் நண்பர்கள் தான். அதே போலத் தான் என்னிடம் 2 அடிமைகள் சிக்கினார்கள். (இல்லை நான் அவர்களிடம் சிக்கிக் கொண்டேன் அப்படினும் சொல்லலாம்). ஒருத்தன் பெயர் ஜெகன். அந்த பெயர் காலேஜிற்காக. எங்களுக்கு பும்பா. (நீங்கள் 90ஸ் கிட்சாக இருந்தால் பும்பா என்கிற கார்ட்டூன் காட்டுப்பன்னியைத் தெரிந்திருக்கும்.) கடவுள் ஒவ்வொருவரையும் படைக்கும் போதும் ஒரு மனிதனை 2 பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் போடுவார். ஒன்று அடி கொடுக்கக் கூடிய பிரிவு, மற்றொன்று அடி வாங்கக் கூடிய பிரிவு. நானெல்லாம் 2 வது பிரிவு. ஆனால் கடவுளே குழம்பிப் போய் இந்த பும்பா மாதிரியான ஜந்துக்களை 2 பிரிவுக்கும் பொதுவாக போட்டு விடுவார். எப்படி என்று விளக்குகிறேன்.

எங்கள் கல்லூரியில் பொதுமாத்து என்றொரு கலாச்சாரம் உண்டு. எந்த நல்ல விஷயம் நடந்தாலும் பெரும்பாலும் அந்த நல்ல விஷயத்திற்கு காரணமானவனை குனிய வைத்து ஊரே முதுகில் தர்ம அடி கொடுக்கும். அதில் அடி கொடுப்பவர்களுக்கு ஒரு ஆனந்தம். அடி வாங்குபவன் தான் ஏற்கனவே எதோ ஒரு நல்ல விஷயத்தால் ஆனந்தமாக இருக்கிறான் தானே.  இதை ஏன் செய்கிறோம் என்றெல்லாம் தெரியாது. எங்கள் சீனியர்கள் செய்தார்கள். அவர்களுக்கு முன் அவர்கள் சீனியர்கள் செய்தார்கள். நாங்களும் மத வழிபாடு போல தொடர்ந்து அடி கொடுத்துக் கொண்டிருந்தோம். (நீங்கள் நினைப்பது போல கொடூர அடியெல்லாம் இல்லை. செல்லமாக அடிப்பது தான், ஆனாலும் வலிக்கும் :( சில விநாடிகள் தான். குற்றால அருவி முதுகில் பலமாக விழுவது போல தப் தப் தப் என்று. ஆனால் அதற்குள்ளாகவே அண்ட சராசரங்களின் மொத்த ரகசியங்களும் நெற்றிப் பொட்டில் எட்டிப் பார்த்து சென்றிருக்கும். எத்தனை தடவை வாங்கிருக்கேன், சரி அது வலி வேற டிபார்ட்மெண்ட், கதைக்குள்ள போவோம்). பிறந்த நாள் வந்தாலோ, பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்தாலோ, பெண்ணிடம் கைப்பேசி எண் வாங்கினாலோ என எது எதெற்கெல்லாமோ அடி விழும். இதில் க்ராத்தே பழகியது போல ஒன்றிரண்டு பேர் போடும் அடி மட்டும், தனியாக வலிக்கும். அடி கொடுப்பதெற்கென்றே பிறந்த காட்டு மாடுகள் அவர்கள். நான் சொன்ன கடவுள் படைத்த முதல் வகை. முதல் இரண்டு வருடங்கள் எங்கள் பும்பா அந்த அடி கொடுக்கும் பிரிவில் தான் இருந்தான். ஆனால் ஊரில் ஒருத்தரை விடாமல் எல்லோரிடம் வம்பு இழுத்து வைத்திருந்ததனால், மூன்றாம் நான்காம் ஆண்டில் அடி வாங்கும் இரண்டாம் பிரிவுக்கு வந்திருந்தான். லாலா கடையில் அல்வா சாப்பிட்டு விட்டு கடைசியாக மிக்சர் கொசுறு வாங்குவது போல, ஊரில் எவனுக்கு பொது மாத்து விழுந்தாலும், முடிக்கும் போது கடைசியாக நமது பும்பாவையும் உள்ளே இழுத்துப் போட்டு சில அடிகள் போட்டு விட்டு செல்வார்கள். அது வரைக்கும் குதித்து குதித்து அடித்து கொண்டிருந்தவன், அடி வாங்கியவுடன் "டேய் சம்பந்தமே இல்லாம என்னை ஏண்டா அடிக்கிறீங்க" என்பான். ஆனால் எவனுமே அவனை மனுஷனாக மதிக்காததால் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவனும் எல்லா பொது மாத்திலும் கொசுறு அடி வாங்கிக் கொண்டிருந்தான்.

இப்படி ஒரு நண்பன் என்றால், இன்னொரு நண்பன் செல்வம் மற்றொரு வகை. இந்த ஊமைக் குசும்பு என்று சொல்வார்களே, அதற்கு Thesarus இல் தேடிப் பார்த்தால் செல்வம் என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் நான் இருப்பேன் என்னும் கிருஷ்ண பரமாத்மா போல, அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் இவனும் இருப்பான். என்ன கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அநியாயம் நடப்பதற்கே இவன் தான் காரணமாக இருப்பான். ஆனால் அதைக் கண்டு பிடிப்பதற்குள் எப்படியோ தப்பி இருப்பான். இந்த இரண்டு பேரிடம் தான் நான் 3 வருடங்கள் ரூம் மேட்டாக குப்பை கொட்டினேன். 

மன்மத லீலையை வென்ற சிலர் முதலாம் ஆண்டிலேயே பெண்களின் எண் வாங்கி, "ஏய் இன்னைக்கு எங்க மெஸ் சாம்பார்ல உப்பே இல்லை தெரியுமா" என்று நாட்டிற்கு தேவையான கருத்துக்களை இரா முழுக்க பேசும் வித்தைக்காரர்களாக இருந்தார்கள். இந்த பும்பாவையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு நானென்ன கமலஹாசனாகவா ஆகி விட முடியும், இல்லை என்னை வைத்துக் கொண்டு அவர்கள் தான் ஜேம்ஸ் பாண்ட் ஆகி விட முடியுமா? கடைசி வரை "செய் அல்லது செத்து மடி என்றார் நேதாஜி, படி அல்லது பன்னி மேய் என்கிறார் என் பிதாஜி! ஹி ஹி ஹி" என்பன போன்ற மொக்கை ஜோக்குகளை எங்களுக்குள் பார்வார்ட் செய்து கொண்டிக்கும் படியான வாழ்க்கையைத் தான் கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகளில் வாழ முடிந்தது.

ஆனால் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை தான் வெல்வது என்பது பழமொழி அல்லவா. அதனால் நாங்களும் முயற்சி செய்ய ஆரம்பித்தோம். ஒரு நாள் விடுதியில் நானும் செல்வமும் எப்படிடா பயப்படாம ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்வது என்கிற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். (காதலிப்பதற்கு பெண்ணெல்லாம் தயாராக இல்லை. இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன செய்ய என்பதான மேம்பட்ட சிந்தனைகள் ஓடிய காலம் அது) பல்வேறு முத்தான சிந்தனைகளை உதிர்த்து ஆழ்ந்த யோசனையில் இருந்த போது, நமது திருவாளர் பும்பா அரக்க பரக்க ஓடி வந்தான். மச்சி டேய், உங்களுக்கு ஒண்ணு தெரியுமாடா என்று மூச்சிரைக்க நின்றான். சரி நாங்களும் பெண்களிடம் பயப்படாமல் பழகுவதற்கு  எதோ புதிதாக யோசனை கண்டுபிடித்து விட்டான் போல என்று நினைத்து, சரிடா, பதட்டப்படாம சொல்லு என்றோம். "மெஸ்ல உருளைக்கிழங்கு சிப்ஸ் எல்லாருக்கும் ஒரு தடவ தான கொடுப்பாங்க, நான் இன்னைக்கு ஏமாத்தி 2 தடவை வாங்கிட்டேனே, எப்படி பாத்தியா" என்றான் வாயெல்லாம் பல்லாக. எங்களுக்கோ செம காண்டு, "உங்க வாழ்க்கைக்கும் சேர்த்து தான் யோசிச்சுட்டு இருக்கோம் சென்றாயன். இப்படி சோறு சோறுனு அலையறீங்களே" என்று கோவமாக அடிக்க முற்பட்டோம். காட்டுப்பன்னி அல்லவா, கடைசியில் அவன் தான் எங்களைப் போட்டு அடித்தான்.

ஒரு வழியாக பல்வேறு யோசனைகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பில் ஜெபா மிஸ் சொல்லிய 4 பசுக்களும் ஒரு சிங்கமும் நீதிக் கதை தான் எங்களுக்கு கை கொடுத்தது. (எனவே தான் மாணவர்களே நீதிக் கதைகளை நீங்கள் கருத்தூன்றி படிக்க வேண்டும்) தனியாக ஒரு பெண்ணிடம் சென்று காதலை சொல்வதால் தானே பயம். மூன்று பேரும் மொத்தமாக சென்று "வீ லவ் யூ" என்று சொன்னால் தைரியம் வந்து விடும் அல்லவா என்கிற முத்தான யோசனை உதித்தது. உலகத்திலேயே வேறு எவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்றி இருக்காது. நம் எல்லோருக்கும் பிடித்த பெண்ணிடம் சென்று மொத்தமாக "வீ லவ் யூ" என்று சொல்லுவோம். அந்த பெண் யாரை ஒத்துக் கொள்கிறாளோ மற்றவர்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்கிற கண்றாவியான ஜெண்டில்மேன் ஒப்பந்தம் வேறு. சரி எல்லாம் தயராகி விட்டது. இவ்வளவு விஷயங்கள் பார்த்து பார்த்து யோசித்த நாங்கள், ஒரு சின்ன விஷயத்தை மட்டும் மறந்து விட்டோம். எங்கள் காதலை சொல்ல ஒரு பெண் இல்லை. கிடைத்திருந்தால் அன்றே எங்கள் வாழ்வில் வசந்தம் மலர்ந்திருக்கும். (இப்படியெல்லாம் எங்களை நாங்களே தேற்றிக் கொள்வது தான், வாசகர்கள் கண்டு கொள்ளக் கூடாது). காதலைச் சொல்லும் பெண்ணை மூன்று பேருக்கும் பிடித்திருத்திருக்க வேண்டும் என்பது தான் ஒரே விதி. அப்படிப்பட்ட பெண்ணிற்கு நாங்கள் எங்கே போவது. வடிவேலு காத்து காத்து, காத்துக்கு நான் எங்கடா போவேன் என்று தேடுவதைப் போல, நாங்களும் எங்கள் கல்லூரியிலேயே சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தோம். கடவுள் இருக்கிறான் குமார் என்பதைப் போல தான் அந்த சம்பவம் நடந்தது......

(தொடரும்)


கதையின் இறுதிப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். 

புதன், 18 ஜூலை, 2018

பாரத் ரத்னா - பகுதி 2

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பகுதி ஒன்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முன்கதை சுருக்கம்:

(ஹாக்கியில் சேர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்கிற பாதை மிகக் கடினமாக இருந்ததால், கல்லூரி தமிழ் மன்றத்தில் சேர்ந்து பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தேன். வீட்டில் சண்டை போட்டு காசு வாங்கி தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றேன். 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் 2 நாட்கள் எந்த பரிசும் கிடைக்கவில்லை. வீட்டிலோ போட்டியில் ஜெயித்து உங்கள் காசை கொடுத்து விடுகிறேன் என்கிற என் வாய்ச்சவடால் ஞாபகம் வந்தது)

மூன்றாம் நாள். இறுதி நாள். 2 போட்டிகள். குறும்பட போட்டி ஒன்று, மேலும் மௌன மொழி என்று சொல்லபடுகிற Dumb Charades. இதில் குறும்பட போட்டிக்கு ஒரு படம் தயாரித்து இருந்தோம். அதை அனுப்பி வைத்தோம். அது ஒரு தனி கிளைக் கதை. பிறகு சொல்கிறேன். இந்த மௌன மொழி போட்டி மிக சாதரணமாக இருக்காது. வெறும் திரைப்பட தலைப்புகள் மட்டுமல்லாது பழமொழிகள், அரசியல் ஆளுமைகள், இலக்கிய புத்தகங்களின் பெயர்கள் என்று வித்தியாசமாக இருக்கும். அதை ஒருவர்  பேசாமல் நடிக்க, அணியில் இருக்கும் மற்ற இருவர் கண்டுபிடிக்க வேண்டும். இது பல்வேறு சுற்றுகளாக ஒவ்வொரு சுற்றுகளிலும் வித்தியாசமான விதிகளோடு இருக்கும். இதற்கு அணியில் இருக்கும் மூவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களும் மிகுந்த தயாரிப்பிற்கு பிறகு வந்திருப்பார்கள். ஒவ்வொரு அணியும் அவர்களுக்குள்ளாகவே சைகை மொழி வைத்திருப்பார்கள். எனவே இது ஒரு சாதாரண போட்டி என்று கடந்து விட முடியாது.     

நானும் என்னோடு சண்முகன், திலீபன் என்ற இருவரும் ஒரு அணியாக உள்நுழைந்தோம். நாங்களும் சைகை மொழி, மற்ற தயாரிப்புகள் என தயாரக தான் சென்றோம். இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அணிகளில் எங்கள் அணியும் ஒன்று. மொத்தம் 2 பரிசுகள் தான். இது தான் கடைசி போட்டி கூட. இதில் வென்றால் தான் உண்டு. ஒவ்வொரு சுற்றாக நடந்து வந்தது. நாங்களும் சளைக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்தோம். ஒரு சுற்றில் ஒரு கேள்வியைத் தவற விட்டு, இரண்டாம் இடம் வந்து விட்டோம். எங்களைப் போலவே இன்னொரு அணியும் இரண்டாம் இடத்தில் வந்திருந்தார்கள். இறுதியாக பழமொழி சுற்று வந்தது. அணியில் இருக்கும் ஒருவரிடம் பழமொழி ஒன்றை காண்பிப்பார்கள். அவர் அங்கிருக்கும் கரும்பலகையயில் அந்த பழமொழியை வரைய வேண்டும். எண்களோ, எழுத்துகளோ பயன்படுத்தக் கூடாது. 3 நிமிடத்தில் 2 பழமொழிகளை வரைந்து விட்டு அவர் சென்று விட வேண்டும். அணியில் இருக்கும் மற்ற இருவர் அதன் பிறகு வந்து அவர் வரைந்திருக்கும் பழமொழி என்ன என்று சொல்ல வேண்டும். இதில் ஒரே ஒரு வாய்ப்பு தான். வரைந்தவர், ஒரே முறை வரைந்த பின் சென்று விடுவார். அணியில் மற்ற இருவரும் பதில் சொல்லும் வரை அவரைக் காண இயலாது. 

எங்களோடு இரண்டாம் இடத்தில் இருந்த அந்த அணி முதலில் சென்றது. அந்த அணியின் நபர் வரைந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் நண்பர்கள் சிலர் அது என்ன பழமொழி என யூகித்து அவர்கள் அணியில் இருந்த மற்ற இருவருக்கும் ரகசியமாக சொல்லி விட்டார்கள். இதை நாங்கள் மற்றும் பார்வையாளர்களில் சிலர் பார்த்து விட்டோம். போட்டி நடத்துபவரிடம் சென்று இது முறையல்ல, அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என முறையிட்டோம். ஆனால் அந்த அணியோ எங்களைப் பார்த்து, இவர்களும் இரண்டாம் இடத்தில் இருப்பதால் எங்களை வீழ்த்த பொய் சொல்கிறார்கள் என சாதிக்க ஆரம்பித்தார்கள். அடப்பாவிகளா, இப்படி அபாண்டமா பொய் சொல்றாங்களே, உலகத்துல எல்லாருமே உன்ன மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்கடா சிவா என மனதிற்குள் நொந்து கொண்டேன். ஆனால் போட்டியை நடத்தும் நடுவர்கள், இது தேவையில்லாத பிரச்சனை, அதனால் கண்டுகொள்ள வேண்டாம். போட்டி தொடர்ந்து நடக்கும் என அறிவித்தார்கள். எதிர்பார்த்தது போலவே அந்த அணி பழமொழி சுற்றில் 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டார்கள். எங்களுடைய முறை வந்தது. நண்பன் திலீபன் வரைந்து விட்டு சென்றான். நானும் சண்முகனும் வெகு சுலபமாகவே அந்த 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டோம்.

இறுதி சுற்று முடிந்த பின்பும் இரண்டாம் இடத்தில் 2 அணிகள் இருப்பதால் மேலும் ஒரு டை-பிரேக்கர் சுற்று வைப்பது என நடுவர்கள் முடிவெடுத்தார்கள். ஒரே கேள்வி இரு அணிகளுக்கும். யார் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். இரண்டு அணிகளுக்கும் ஒரே கேள்வி ஆதலால், முதலில் ஒரு அணிக்கு கேள்வி தரப்படும். அப்பொழுது மற்ற அணி வேறு ஒரு நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும். (கைப்பேசிகள் எதுவும் இல்லாமல், போட்டியாளர்கள் தவிர வேறு யாரும் இல்லாமல் என்று கெடுபிடி). ஏற்கனவே இன்னொரு அணியின் மீது பிராது இருந்ததால் அவர்களே முதலில் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் நேர்மையாக இருந்து கொள்கிறோம் என்றோம். நடுவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். நாங்கள் வெளியில் சென்று விட்டோம். சில நிமிடங்கள் கழித்து எங்கள் அணியை அழைத்தார்கள். முதல் அணி எவ்வளவு நேரத்தில் கண்டறிந்தார்கள் என்று கூட தெரியாது. மேடை நோக்கி சென்றோம். மொத்த அரங்கமும் அமைதியாக எங்கள் அணியையே பார்த்துக் கொண்டிருந்தது. எங்களுக்குள் லேசான பதற்றம். சண்முகன் நன்றாக நடிப்பான். நான் நன்றாக யூகிப்பேன் என்பதால், அவனே நடிப்பது என முடிவானது. போட்டி ஆரம்பம் ஆனது. சண்முகன் முதலில் தன் மொத்த உடம்பையும் விரலால் காட்டினான். எங்கள் சைகை மொழியில் அதற்கு இந்தியா என்று பொருள். நான் இந்தியா என்று கத்தினேன். அப்படியே விரலை எடுத்து தனது இடது காலுக்கு கீழே காட்டினான். தமிழ்நாடா என்றேன். அதற்கும் கீழே என சைகையால் காண்பித்தான். இலங்கையா என்றேன். ஆம் என தலையசைத்து, துப்பாக்கி போல விரல்களை காண்பித்தான். விடுதலைப் புலிகள் பிரபாகரன் என்றேன். இல்லை என தலையசத்து அறிவு என குறிப்பிடும் விதமாக மூளையைக் காட்டினான். ஆண்டன் பாலசிங்கம் என்று கத்தினேன். ஆம் என ஓடி வந்து என்னை அப்படியே அலேக்காக தூக்கி இருமல் மருந்து பாட்டிலை குலுக்குவது போல குலுக்கினான். மொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது. அந்த அணி 1 நிமிடம் 30 விநாடிகள் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்டதை நாங்கள் 25 வினாடிகளில் கண்டறிந்து விட்டோம். வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி போல மொத்த அரங்கமும் எங்களுக்காக கை தட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

போட்டியை முடித்து விட்டு ஆனந்த கண்ணீரோடு வெளி வந்த போது என் நண்பன் ஒருவன் ஓடி வந்து, 'டேய் நீங்க எடுத்த ஷார்ட் பிலிமுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குடா என்றான். Icing on the cake என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதை அன்று தான் உணர்ந்தேன். (அந்த குறும்படம் யூட்யூபில் உள்ளது. ஒரு வேளை உங்கள் உயிர் மீது ஆசை இல்லை என்றால் தைரியமாக லிங்க கேட்கவும். கொடுக்கிறேன்) ஒரு வழியாக பரிசு வாங்கி விட்டேன். இனிமேல் வீட்டில் இன்னும் தைரியமாக வாய்ச்சவடால் விடலாம். சும்மாவே என் வாய் நீளம் இனி கேட்க வேண்டுமா :)

மௌன மொழி போட்டிக்கு இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் கிடைத்தது. ஆளுக்கு 700 ரூபாய். இது ஒலிம்பிக்கும் இல்லை. நான் வென்றது தங்கமும் இல்லை. ஆனால் பரிசின் மதிப்பை ரூபாயில் கணக்கிட முடியுமா என்ன. ஒரு வேளை எனது அந்திம காலத்தில் என் வாழ்வில் நடந்த மிகுந்த மகிழ்ச்சியான தருணங்களை அசை போடும் பொழுது, இந்த 700 ரூபாய் பரிசும் நிச்சயமாக அதில் இருக்கும். என்னைப் பொறுத்த வரை அது தான் எனக்கு பாரத் ரத்னா :) 

வெள்ளி, 13 ஜூலை, 2018

பாரத் ரத்னா - பகுதி 1



(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

முதலாம் ஆண்டு கல்லூரி மற்றும் விடுதியில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால் இரண்டாம் ஆண்டில் அதற்கு நேர் எதிர். அவிழ்த்து விட்ட கழுதைகள் நாங்கள். பரீட்சைக்கு முந்தின நாள் படித்தாலே பாஸ் ஆகி விடலாம் என்று தெரிய ஆரம்பித்ததால் படிக்கிற பழக்கம் மறைந்து விட்டது. ஆனால் 5 மணியிலிருந்து இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதற்கு என்ன செய்ய? அப்போது தான் விடுதியில் சில அறைகளில் கணினி வர ஆரம்பித்தது. எதோ கோட் அடித்து பில்கேட்ஸை மூலையில் உட்கார வைக்கிற அளவுக்கு பேசி ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து அடம் பிடித்து கணிணி வாங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல கோட் அடிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் அது பயன்பட்டது. விளையாட, படம் பார்க்க (பக்தி படங்கள் உட்பட) என அதில் கொஞ்சம் பொழுது போனது. இருந்தாலும் ஏதாவது உபயோகமாக செய்யலாமே என்ற குற்ற உணர்வு குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. சரி ஏதேனும் விளையாட்டுகளில் சேரலாம் என்று முடிவு செய்து நானும் சில நண்பர்களும் முடிவு எடுத்தோம்.

சரி தேசிய விளையாட்டான ஹாக்கியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என முடிவு செய்து, புதிய ஷூ எல்லாம் வாங்கி முதல் நாள் பயிற்சிக்கு சென்றோம். சென்ற உடனே ஹாக்கி மட்டையை கையில் கொடுத்து கோல் அடித்து, அப்படியே இந்திய அணியில் இடம் பிடித்து, ஒரு உலக கோப்பை வாங்கி, அப்படியே ஒரு பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்று கனவு கண்டிருந்த போது, அதில் மண்ணள்ளி போட்டு, 'போய் கிரவுண்ட நாலு ரவுண்டு சுத்திட்டு வாங்க, அப்புறம் பாக்கலாம்' என்றார் சீனியர் அண்ணண் என்கிற எங்கள் பயிற்சியாளர். என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காக, நான் எப்படி இருப்பேன் என்று கூறுவது இந்த இடத்தில் அவசியம். ஒரு 2HB பென்சிலை எடுத்து முழு நீள வெள்ளைத் தாளில் ஒரு கோடு வரைந்தால் எவ்வளவு ஒல்லியாக இருக்குமோ அதை விட ஒல்லியாக இருந்தேன் கல்லூரி படிக்கும் போது. யாராவது கேட்டால், காந்தியே ஒல்லியா தாண்டா இருந்தார், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கலியா என்று வாய் விட்டுக் கொண்டிருந்தேன். நமக்கு வாய் தானே எமன். சரி பயிற்சிக்கு வருவோம், 4 ரவுண்டு தான, முடிச்சுட்டு ஹாக்கி மட்டையை தூக்குறோம், பாரத் ரத்னா வாங்குறோம் என்று ஓட ஆரம்பித்தேன். 2 ரவுண்டுக்கு மேல் நாக்கு தள்ளியது. இருந்தாலும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்கிற பெரியோரின் வாக்குக்கிணங்க ஓடி முடித்து மேலும் சில பல உடற்பயிற்சிகளையும் செய்து முடித்தேன். இப்படியாக ஓட்டம், உடற்பயிற்சி என்று சில வாரங்கள் எங்களுக்கு தண்ணி காட்டி விட்டு, கடைசியாக தான் ஹாக்கி மட்டையைக் கையில் கொடுத்தார்கள். சரி இனிமேலாவது வாழ்க்கையில் நட்சத்திர ஜன்னலில் பாட்டு வந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது தான், ராங் சைடில் சென்று சீனியர் அண்ணாவிடம் ஹாக்கி மட்டையில் ஒரு அடி வாங்கினேன். வாழ்க்கைனா சில பல அடிகள் விழத்தான் செய்யும் என்று கடந்து போக முடியவில்லை, என்னா வலி! 

இருந்தாலும் பாரத் ரத்னா கனவு கலையக்கூடாது என்பதால் தொடர்ந்து பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். வருடாந்திர விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி சாம்பியன் பட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டிலிருந்தும் ஒவ்வொரு அணி, மற்ற அணியுடன் மோத வேண்டும். இரண்டாம் ஆண்டு அணியில் வேற ஆள் கிடைக்காததால் நானும் என் நண்பர்கள் சிலரும் அணியில் சேர்க்கப் பட்டோம். எங்களுக்கான முதல் ஆட்டம் நான்காம் ஆண்டு சீனியர்கள் அணியுடன். ஆட்டத்திற்கு முந்தின நாள் எங்கள் அணியின் சின்னையா எங்களிடம் வந்து 'டேய் மச்சி ஒரு வேளை நாம நாளைக்கு ஜெயிச்சுட்டோம்னா, சீனியர்லாம் நம்மளைஅடிக்க மாட்டாங்கல்ல" என்றான் அப்பாவியாக. எங்கள் அணியின் கோல் கீப்பரிடம் சென்று "மச்சி ஒருவேளை பெனால்டி வரைக்கும் வந்திடுச்சுனா, அதுக்குலாம் பிராக்டிஸ் பண்ணிட்டல" என்றான். இதே போல பேசுவதற்கு தமிழில் ..... கொழுப்பு என்று ஒரு அருமையான பதம் உள்ளது. சரி ஆட்டத்திற்கு வருவோம், ஆட்டம் தொடங்கியதிலிருந்து மரண அடி, வேறு யாருக்கு எங்களுக்கு தான். ஒவ்வொருத்தனும் ராங் சைடில் சென்று அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல எங்கள் சின்னையா D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்து விட்டு கோல் கோல் என்று கத்திக் கொண்டிருந்தான். (D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்தால் அது செல்லாது. எங்களுக்கு அது கூட தெரியவில்லை). ஒரு வலியாக (வலி - பிழையன்று) 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினோம். சரி இனிமேல் ஹாக்கி நமக்கு ஒத்து வராது, பாரத் ரத்னா வேறு வழியாகவும் சென்று வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அப்போது தான் கல்லூரியில் தமிழ் மன்றம் துளிர் விட ஆரம்பித்தது. ஒவ்வொரு செவ்வாயும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட சீனியர்கள் 5 மணிக்கு தமிழ் மன்ற கூட்டம் நடத்தினார்கள். சரி நமக்கு தான் தமிழ் மீது கொஞ்சம் ஆர்வம் உள்ளதே என செல்ல ஆரம்பித்தேன். புதுமைப்பித்தன் கதை வாசிப்பு, இலக்கிய விவாதம் என பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். நம்ம பாடிக்கு இது தாண்டா சரி என்ற முடிவோடு தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்திலும், பிப்ரவரி மாதம் தஞ்சை சாஸ்திரா பல்கலை கழகத்திலும் கலை இலக்கிய போட்டிகள் நடத்துவார்கள். கல்லூரியில் இருந்து தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், நுண்கலை மன்றம் சார்பாக மாணவர்கள் சென்று வருவார்கள். அப்படியாக மூன்றாம் ஆண்டு திருச்சி சென்ற ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.

அனுமதி கட்டணம், போய் வர பேருந்து செலவு, தங்குவதற்கான கட்டணம் என்று ஒரு செலவு வரும். சிங்கிள் டீக்கே சிங்கி அடித்துக் கொண்டிருந்த காலம் அது. கல்லூரியில் இருந்து ஒரு சிறு துரும்பை கூட அசைக்க மாட்டார்கள். போட்டிகளுக்குக் கூட OD (On-Duty) கிடைக்காது. விடுப்பு எடுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஊமை நாடகத்தில் நடிக்க அனவரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும் என்பது விதி. அதற்கு டீ. ஷர்ட் அடிக்க கூட காசில்லாததால், அனைவரிடமும்் இருக்கிற கருப்பு டீ ஷர்டை (அதில் எந்த டிசைன் போட்டிருந்தாலும்) உள் வெளியாக திருப்பி அதை அணிந்து நடித்துக் கொண்டிருந்தோம் என்றால் எங்கள் பட்ஜெட்டை பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இப்படியாக செல்லும் போட்டிகளில் எப்படியாவது வென்று போட்ட காசை எடுக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். 

செப்டம்பர் மாத திருச்சி போட்டிக்கு எப்படியோ வீட்டில் கெஞ்சி கூத்தாடி காசு ஏற்பாடு செய்து போய் விட்டு வந்தேன். கொடுத்த காசுக்கு எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது என்ற விதிமுறை எங்களுக்கு உண்டு. ஆனால் விதி பாருங்கள், அந்த வருடம் நடந்த எந்த போட்டியிலும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. ராமசாமிக்கு கொடுத்த காசு ஊஊ என்பது போல போட்ட காசு எல்லாம் கோவிந்தா. என்னுடன் வந்த சீனியர்கள் பலர் பரிசு பெற்றிருந்தார்கள். "கவலைப்படாதடா, முதல் தடவ தான உனக்கு, எனக்கும் முதல் தடவலாம் ஒண்ணும் கிடைக்கல, அடுத்த போட்டில பார்த்துக்கலாம்" என்று ஆறுதல் கூறினார்கள். ஹாக்கியைப் போல இதிலும் முதல் தோல்வி கண்டவுடன் ஓடி விட விருப்பம் இல்லை. உண்மையாகவே இந்த மன்றமும் அதன் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால், தொடர்ந்து கூட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தேன்.

அடுத்ததாக பிப்ரவரி மாதம் சாஸ்திரா பல்கலைகழகத்தில் நடைபெறும் போட்டிகள். இம்முறையும் போன் செய்து வீட்டில் பணம் கேட்க, நல்ல அர்ச்சனை கிடைத்தது. நல்ல வேளை போனிலேயே செருப்பால் அடிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் வரவில்லை. "அவன படிக்கிறதுக்கு அனுப்புனோமா இல்ல இப்படி ஊர் ஊரா போட்டி போட்டினு திரிய அனுப்புனோமா, ஒழுங்கா படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல செலெக்ட் ஆக சொல்லு, இந்த போட்டிலாம் அப்புறம் பார்த்துகலாம்" என்று அப்பாவிடமிருந்து உத்தரவு. இள ரத்தம் அல்லவா, நானும் சூடாகி அம்மாவிடம் போன் செய்து, "சும்மாலாம் காசு தர வேணாம், அப்பாவ கடனா கொடுக்க சொல்லுங்க, நான் போட்டில ஜெயிச்சுட்டு வந்து காச திருப்பி கொடுத்துடறேன்" என்றேன். வாய் வாய், இந்த வாய் இருக்கிறதே! போன தடவையே ஒண்ணும் கிடைக்கல, இந்த தடவ வீட்ல வாய் வேற விட்டுட்டோம் என்று நொந்து கொண்டேன். அம்மா ஒரு வழியாக தலைமையிடம் பேசி காசு அனுப்பி விட்டார்கள். எடுத்துக் கொண்டு நானும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்று கிளம்பி விட்டேன்.

போட்டி 3 நாட்கள் நடைபெறும். வழக்கம் போல நானும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன். கவிதை போட்டியில் எல்லாம் கலந்து கொண்டு வானமோ நீலம் நீதான் என் பாலம் போன்ற அரிய கவிதைகளை எல்லாம் எழுதி வைத்து விட்டு வந்தேன். பேச்சுப் போட்டி, தமிழ் வினாடி வினா, கற்பனை, கட்டுரைப் போட்டி என முதல் 2 நாட்கள் கலந்து கொண்ட எந்த போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. லேசாக பயம் வர ஆரம்பித்தது. கூட வந்த எல்லாரும், எனது ஜூனியர் உட்பட ஒரு பரிசாவது வாங்கி விட்டார்கள். வீட்டில் வேறு வாய் விட்டு வந்தோமே, என்கிற கவலை எனக்கு. மூன்றாம் நாள். இறுதி நாள்....
(தொடரும்)