சனி, 1 டிசம்பர், 2018

நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் - பகுதி 2

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஒன்பதாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இதுவரை:  இந்தக் கதையின் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்தனியாக ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல தானே பயம். நானும் எனது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து மொத்தமாக 'வீ லவ் யூ' என்று எங்கள் மூவருக்கும் பிடித்த ஒரு பெண்ணிடம் சொல்வோம் என சபதம் எடுத்திருந்தோம். எங்கள் 3 பேருக்குமே பிடித்த பெண்ணுக்கான தேடல் தொடங்கியது.

----------
ஒவ்வொரு துறைக்கும் ஒரு விழா வருடத்தில் நடக்கும். ஆட்டம் பாட்டம் என 3 நாட்கள் செல்வதே தெரியாது. எங்கள் துறைக்கான விழாவும் வந்தது. வழக்கம் போல நாங்களும் கூத்தடிக்க ஆரம்பித்தோம். அப்பொழுது இரண்டாம் ஆண்டு துறை மாணவிகளின் நடனம் என்ற அறிவிப்பு வந்தது. இந்த மாதிரி விழாக்களில் நடக்கும் நடனம் எல்லாமே மிக சுமாராக தான் இருக்கும். ஆனால் அங்கே யார் மேடையைப் பார்ப்பது. நாங்கள் நண்பர்களாக சேர்ந்து மேடைக்கு கீழே நின்று தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருப்போம்.

வழக்கம் போல இந்த இரண்டாம் ஆண்டு மாணவிகளின் நடனமும் சுமார் தான். ஆனால் சேற்றில் மலர்ந்த மல்லிகையாய் (தாமரை மலராது) ஒரு மாணவியின் நடனம் மட்டும் தனியாக தெரிந்தது. பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். விடுவோமா, மூளையின் ஒரு ஓரத்தில் ஒரு ரிமைண்டர் போட்டு வைத்திருந்தேன். ஆட்டம் முடிந்து அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தோம்.

டேய், இன்னைக்கு ஆடுனதுல அந்த செகண்ட் இயர்…” என நான் ஆரம்பிக்க, செல்வமோஆமாண்டா அந்த செகண்ட் இயர் பொண்ணுஎன தொடர, பும்பாஎனக்கும் பிடிச்சிருந்ததுடாஎன முடிக்க எங்கள் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டதை அறிந்தோம். அப்புறம் என்ன, ரா, சிஐஏ, எம்..5 வேலைகளை ஆரம்பித்தோம். அந்தப் பெண்ணுடைய மொத்த டீடெய்லும் 24 மணி நேரத்துக்குள் எங்கள் கைகளில் வந்தாக வேண்டும் என வேலைகளை ஆரம்பித்தோம். பருவத்தேர்வுக்குக் கூட இவ்வளவு கடினமாக உழைத்ததில்லை. முயற்சி தன் மெய் வருத்த கூலி கிடைத்தது. அந்த பெண் பெயர் கலா. எங்களது துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். ஊர் தேனி. வீட்டிற்கு ஒரே பெண். அவளது விடுதி அறை எண் 204. மாதம் ஒரு முறை தேனிக்கு சிங்காநல்லூர் பேருந்தி நிலையத்தில் இருந்து செல்வாள்.  அவள் வீட்டில் ஒரு லேபரடார் நாய் உள்ளது. அதற்கு வயது 4. மாநிறம். அதன் பெயர் ஜேக்கி என ஆதி முதல் அந்தம் வரையிலான அனைத்து தகவலையும் திரட்டி விட்டோம். இனி ஒரு நல்ல நாள் பார்த்துவீ லவ் யூசொல்ல வேண்டியது மட்டும் தான் பாக்கி.

எங்கே எப்போது சொல்லலாம் என ஸ்கெட்ச் போடுவதற்காக எங்களுக்கு ஒரு அடிமை தேவையாயிருந்தது. அவளது வகுப்பில் படிக்கும் எங்கள் ஜீனியர் ஒருவனிடம் எங்களுக்க நல்ல பழக்கம். அவனை வைத்தே ஸ்கெட்ச் போடுவோம் என முடிவாகியது. அவனிடம் சென்று விவரத்தைக் கூறியவுடன் எங்களை மேலும் கீழும் ஒரு முறை பார்த்தான். “அண்ணே, நிச்சயமா கலா தானா அது? தெரியுமாஎன்றான். “டேய் அவளோட ஜாதகமே எங்ககிட்ட இருக்கு. கலா தாண்டா எங்க ஆளுஎன்றோம். மிக அதிர்ச்சியுடன், “ஏண்ணா உங்க டேஸ்ட் இவ்வளோ மட்டமா இருக்குஎன்றான். இது ஒரு நல்ல டெக்னிக் பாருங்கள் மக்களே. எங்கள் சீனியருக்கும் நாங்கள் இதைத் தான் செய்தோம். ஏதாவது ஒரு அழகான பெண்ணை பற்றி ஒரு சீனியர் விசாரிக்க ஆரம்பித்தால், ஏண்ணா உங்க டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு என்போம். சீனியரும் தன்னுடைய கெத்தை காப்பற்றுவதற்காக, இல்லடா சும்மா விசாரிச்சேன் என்பார். சில பெண்கள் தான் பார்க்கவும் அழகாக இருப்பார்கள், அவர்களையும் சீனியர்கள் கொத்திக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது, அதைத் தடுக்க தான் இப்படி ஒரு யுக்தி. சரி நம் கலா கதைக்கு வருவோம். வழக்கம் போல இந்த ஜூனியரும் எங்களை ஏமாற்ற தான் இப்படி சொல்கிறான் எனத் தெரிந்தது. “டேய் நாங்களும் உங்க வேலையெல்லாம் பண்ணிட்டு தான் வந்திருக்கோம். நீ ஸ்கெட்ச் மட்டும் போட்டுக் கொடு மத்ததை நாங்க பாத்துக்கறோம்என்றோம். சரி அப்புறம் உங்க இஷ்டம் என அவனும் ஒப்புக் கொண்டான்.

முக்கியமான நாளுக்காக நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். மூன்று பேருமே கைப்பேசியின் அழைப்புப் பாடலாக கலா கலா கண்ணடிச்சா கலக்கலாஎன்ற முத்தான அரிய தத்துவபாடலை வைத்திருந்தோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆளுக்கு ஒரு ரோஜாப்பூ, ஒரு வாழ்த்து அட்டை, ஒரு கேட்பரீஸ் டைரி மில்க் மிட்டாய் வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். “குறைந்தது 50 ரூபாயாவது செலவாகும். எதிரில் உள்ள எம்.எஸ் பேக்கரியில் அந்த காசுக்கு ஆளுக்கு 12 பஜ்ஜி திங்கலாம்டாஎன்றான் பும்பா. பஜ்ஜி எப்போது வேண்டுமானாலும் திங்கலாம். ஒரு லட்சிய பயணத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் போது இது போல சிற்றின்பங்களுக்கு எல்லாம் இடம் கொடுக்கக் கூடாது என அவனை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. ஜூனியர் அழைத்தான். அண்ணே வர்ற வெள்ளிக்கிழமை கடசி பாட வேளை ரத்தாகி விட்டது. எங்கள் வகுப்பில் இருந்து அவள் விடுதிக்கு போகும் வழியில் பெற்றோர் மாணவர் சந்திப்பு கூடத்து அருகில் சந்திக்கலாம். அப்போது யாரும் அங்கே இருக்க மாட்டார்கள் என பக்காவாக ஒரு ஸ்கெட்ச் தயார் செய்து கொடுத்தான். நாங்களும் சகல தயாரிப்புகளுடன் இருந்தோம். “வெள்ளிக்கிழமை கடைசி பீரியட்ல சொல்றதும் நல்லது தான். சனி,ஞாயிறு யோசிச்சு ஒரு முடிவு சொல்வாலஎன்று நினைத்தோம். ஏற்கனவே கூறியபடி யாருக்கு அவள் சரி சொன்னாலும் மற்ற இருவரும் விட்டு கொடுத்து விட வேண்டும் என்கிற ஒப்பந்தத்தையும் நினைவில் கொண்டு வந்தோம். வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நாங்கள் குளிப்பதில்லை. அதான் சனி, ஞாயிறு வருதுல்ல, ஒரேடியா அப்போ குளிச்சுக்கலாம் என்ற சோம்பலில் இருந்து விடுவோம். ஆனால் இன்று சாதாரண் நாளா! தலைக்கு குளித்து, ஒரு பாட்டில் ஆக்ஸ் செண்ட் அடித்து, இருப்பதிலேயே மிகக் குறைவாக அழுக்கடைந்த ஒரு சட்டையை எடுத்துப் போட்டு, மூன்று பேரின் ரோஜா, வாழ்த்து அட்டை, மிட்டாயெல்லாம் ஒரு பையில் எடுத்து போட்டு சென்று விட்டோம். கடைசி பாட வேளையும் வந்தது. நாங்கள் குறிப்பிட்டிருந்த இடத்தில் சென்று காக்க ஆரம்பித்தோம். ஒவ்வொருத்தராக வர ஆரம்பித்தார்கள். ஆனால் எங்கள் கலாவை மட்டும் காணவில்லை. நாங்களும் தேடிக் கொண்டிருந்தோம். திடீரென்று ஜூனியரிடமிருந்து ஒரு குறுந்தகவல். அண்ணே அந்த பொண்ணுட்ட உன் கூட சீனியர்ஸ் பேசணுமாம்னு சொல்லி காக்க வெச்சிருக்கேன். உங்க பக்கத்துல தான் நிக்குறா, ஏன் இன்னும் எதுவும் பேச மாட்டேங்கறீங்கஎன்ற செய்தி. என்னது, நம்ம பக்கத்துலயா! என்ற ஆர்வத்துடம் பக்கத்தில் பார்த்தால் வேறு ஏதோ ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். இது நம்ம கலா இல்லையே என்ற குழப்பத்தோடு ஜூனியருக்கு, “தக்காளி டேய், கலாவ வெய்ட் பண்ண சொல்ல சொன்னா வேற ஏதோ ஒரு சுமாரான பொண்ண நிப்பாட்டிருக்க, கைல கிடச்சா செத்தாடா நீஎன்று தகவல் அனுப்பினோம். “நான் தான் அப்பவே சொன்னேன்லணா, சத்தியமா அது கலா தான். கல்ச்சுரல்ஸ் அப்போ மேக்கப் போட்டிருந்தா. எங்களுக்கே முதல்ல ஆச்சர்யம் தான். ஆனா எங்க க்ளாஸ் தான், அதனால எங்களுக்கு தெரியும். நீங்க தான் ஏமாந்தீங்கஎன்ற செய்தி வந்து விழுந்தது. மீண்டும் ஒரு முறை எங்கள் அருகில் நிற அந்த பெண்ணை உற்றுப் பார்த்தோம். மேக்கப் போடாத கலா தான் அது என்று எங்களுக்கு விளங்குவதற்கு வெகு நேரம் எடுக்கவில்லை. எங்கள் மனக் கோட்டை இடிந்த சத்தம் ஒரு வேளை அருகில் நின்ற கலாவுக்கே கேட்டிருக்கலாம். (காற்று அடிக்காமல் மரங்கள் அசையாமல் நிற்கும், அலைகள் பாறைகளில் மோதி உறைந்து நிற்கும், பறவைகள் வானத்தில் பறக்காமல் இருக்கும் தமிழ் சினிமாவின் காட்சிகளை ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்). இதற்குள் கலா எங்கள் அருகில் வந்துஅண்ணா எதோ எங்கிட்ட பேசணும்னு சொன்னீங்களாஎன கேட்க, மொத்த துயரத்தையும் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, ‘, சாரிமா அது நீ இல்லை, அந்த பையன் தப்பா சொல்லிட்டான். நீ போஎன அனுப்பி விட்டோம்.


நானும் செல்வமும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு விட்டோம். ஆனால் பும்பாவிற்கு தான் இன்னும் கோவம். “12 பஜ்ஜிடா, மொத்தம் 12 பஜ்ஜி. கலாக்காக நான் இழந்தது. மனசு வலிக்குதுடாஎன்றான். “டேய் நாங்க எதுக்கு பீல் பண்ணிட்டு இருந்தா நீ எதுக்கு பீல் பண்ணிட்டு இருக்கஎன எங்களுக்கும் கடும் கோபம். “இன்னைக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எம்.எஸ் பேக்கரி போறோம், கைல கிடைச்சத தின்னு கோவத்தை தணிச்சுக்குறோம்என பும்பா முன்னால் நடக்க ஆரம்பித்தான். நாங்களும் பின் தொடர்தோம். பேக்கரியில் சாப்பிடும் போது எதோ ஒரு கைப்பேசியிலிருந்து, ‘ கலா கலா கண்ணடிச்சா கலக்கலாஎன்ற பாட்டு ஒலித்தது. “முதல்ல இந்த ரிங்க்டோன் எழவ மாத்தணும்டாஎன செல்வம் தன் கைப்பேசியை எடுத்து பார்த்தால், அது அவனுக்கு வந்த அழைப்பு இல்லை. எங்கள் இருவரின் கைப்பேசியும் இல்லை. அபோது தான் எங்கள் அருகில் பில் கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் வகுப்பு முருகேசனின் கைப்பேசி அது என்று தெரிந்தது. எங்களைப் பார்த்து, “என்ன பாக்குறீங்க, இப்போ கொஞ்ச நாளா தான் இந்த ரிங்க்டோன். இனிமேல் இப்படி தான்என வெட்கப்பட்டு ஓடிக் கொண்டிருந்தான். எங்கள் பும்பா அவனிடம்டேய் நீ நினைக்குற மாதிரிஎன்று பேச ஆரம்பிக்க, நான் அவனது கையை பிடித்து அமர்த்தி இதே தான் அந்த ஜூனியரும் நம்ம கிட்ட சொன்னான். விடு. பஜ்ஜி சாப்பிடு என்றேன்.


திங்கள், 23 ஜூலை, 2018

நாங்கள் உன்னைக் காதலிக்கிறோம் - பகுதி 1

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் எட்டாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

"இங்க பார்றா தம்பி, பத்தாவது தான் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு. ஜாலியா இருக்கலாம்." இப்படி உங்ககிட்ட சொன்னாங்களா? என் கிட்டயும் சொன்னானுவளே. சரினு நாமளும் நல்லபடியா பத்தாவது முடிச்சிட்டு வந்தா, "இங்க பார்றா தம்பி, 12 ஆவது தான் உன் வாழ்க்கையிலேயே முக்கியமான கட்டம். இதுல மட்டும் ஒழுங்கா படிச்சிட்டேனு வை, அதுக்கு அப்புறம் உன் லைப் செட்டில்டு, ஜாலியா இருக்கலாம்" அப்படினு சொன்னாங்க. சரிதான் கழுதை அதையும் படிச்சிட்டு காலேஜுக்கு வந்தா, "இங்க பார்றா தம்பி.... போதும் நிறுத்துங்க, காலேஜுல படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல வேலை வாங்கிட்டா லைப் செட்டில்டு, அதானே என்று திருப்பி கேட்க தோணியது. நாம் தான் அப்பிராணி ஆயிற்றே, மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன். இவங்க சொல்ற லைப் செட்டில்டுங்கறது வண்டி இழுக்குற குதிரைக்கு முன்னால காட்டுற சாப்பாடு மாதிரி. இந்தா கிடைச்சுரும், அந்தா கிடைச்சுரும்னு பாவம் அந்த குதிரை வண்டிய இழுத்துகிட்டே ஓடும். இந்த உலக ஞானம்லாம் கிடைக்க போதி மரம்லாம் தேவை இல்லை. சரி நாம கல்லூரி வாழ்க்கைக்கு வருவோம். ஒரு வழியா ஒரு காலேஜுல சேர்ந்துட்டோம், இனிமே கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டு, கவலை மறந்தோம் பெண்ணைக் கண்டுனு தமிழ் சினிமாவ நம்பி ஜாலியா இருக்கலாம்னு உள்ள வந்தா, வாங்க தம்பி, மொத்தம் 8 செமஸ்டர், செமஸ்டருக்கு 6 பரீட்சை, 3 யூனிட் டெஸ்ட், 2 பிராக்டிக்கல், இது போக அப்பப்போ அசைமெண்டுனு பொடனிலேயே அடிச்சு உட்கார வெச்சாங்க. நாம தான் எவ்வளவோ பாத்துட்டோமே, இதை பாக்க மாட்டோமானு வண்டி இழுக்க ஆரம்பிச்சோம்.

இதே போல காய்ந்து கருவாடாக போன வாழ்க்கையில கொஞ்சமாவது மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர்கள் நண்பர்கள் தான். அதே போலத் தான் என்னிடம் 2 அடிமைகள் சிக்கினார்கள். (இல்லை நான் அவர்களிடம் சிக்கிக் கொண்டேன் அப்படினும் சொல்லலாம்). ஒருத்தன் பெயர் ஜெகன். அந்த பெயர் காலேஜிற்காக. எங்களுக்கு பும்பா. (நீங்கள் 90ஸ் கிட்சாக இருந்தால் பும்பா என்கிற கார்ட்டூன் காட்டுப்பன்னியைத் தெரிந்திருக்கும்.) கடவுள் ஒவ்வொருவரையும் படைக்கும் போதும் ஒரு மனிதனை 2 பிரிவில் ஏதாவது ஒரு பிரிவில் போடுவார். ஒன்று அடி கொடுக்கக் கூடிய பிரிவு, மற்றொன்று அடி வாங்கக் கூடிய பிரிவு. நானெல்லாம் 2 வது பிரிவு. ஆனால் கடவுளே குழம்பிப் போய் இந்த பும்பா மாதிரியான ஜந்துக்களை 2 பிரிவுக்கும் பொதுவாக போட்டு விடுவார். எப்படி என்று விளக்குகிறேன்.

எங்கள் கல்லூரியில் பொதுமாத்து என்றொரு கலாச்சாரம் உண்டு. எந்த நல்ல விஷயம் நடந்தாலும் பெரும்பாலும் அந்த நல்ல விஷயத்திற்கு காரணமானவனை குனிய வைத்து ஊரே முதுகில் தர்ம அடி கொடுக்கும். அதில் அடி கொடுப்பவர்களுக்கு ஒரு ஆனந்தம். அடி வாங்குபவன் தான் ஏற்கனவே எதோ ஒரு நல்ல விஷயத்தால் ஆனந்தமாக இருக்கிறான் தானே.  இதை ஏன் செய்கிறோம் என்றெல்லாம் தெரியாது. எங்கள் சீனியர்கள் செய்தார்கள். அவர்களுக்கு முன் அவர்கள் சீனியர்கள் செய்தார்கள். நாங்களும் மத வழிபாடு போல தொடர்ந்து அடி கொடுத்துக் கொண்டிருந்தோம். (நீங்கள் நினைப்பது போல கொடூர அடியெல்லாம் இல்லை. செல்லமாக அடிப்பது தான், ஆனாலும் வலிக்கும் :( சில விநாடிகள் தான். குற்றால அருவி முதுகில் பலமாக விழுவது போல தப் தப் தப் என்று. ஆனால் அதற்குள்ளாகவே அண்ட சராசரங்களின் மொத்த ரகசியங்களும் நெற்றிப் பொட்டில் எட்டிப் பார்த்து சென்றிருக்கும். எத்தனை தடவை வாங்கிருக்கேன், சரி அது வலி வேற டிபார்ட்மெண்ட், கதைக்குள்ள போவோம்). பிறந்த நாள் வந்தாலோ, பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்தாலோ, பெண்ணிடம் கைப்பேசி எண் வாங்கினாலோ என எது எதெற்கெல்லாமோ அடி விழும். இதில் க்ராத்தே பழகியது போல ஒன்றிரண்டு பேர் போடும் அடி மட்டும், தனியாக வலிக்கும். அடி கொடுப்பதெற்கென்றே பிறந்த காட்டு மாடுகள் அவர்கள். நான் சொன்ன கடவுள் படைத்த முதல் வகை. முதல் இரண்டு வருடங்கள் எங்கள் பும்பா அந்த அடி கொடுக்கும் பிரிவில் தான் இருந்தான். ஆனால் ஊரில் ஒருத்தரை விடாமல் எல்லோரிடம் வம்பு இழுத்து வைத்திருந்ததனால், மூன்றாம் நான்காம் ஆண்டில் அடி வாங்கும் இரண்டாம் பிரிவுக்கு வந்திருந்தான். லாலா கடையில் அல்வா சாப்பிட்டு விட்டு கடைசியாக மிக்சர் கொசுறு வாங்குவது போல, ஊரில் எவனுக்கு பொது மாத்து விழுந்தாலும், முடிக்கும் போது கடைசியாக நமது பும்பாவையும் உள்ளே இழுத்துப் போட்டு சில அடிகள் போட்டு விட்டு செல்வார்கள். அது வரைக்கும் குதித்து குதித்து அடித்து கொண்டிருந்தவன், அடி வாங்கியவுடன் "டேய் சம்பந்தமே இல்லாம என்னை ஏண்டா அடிக்கிறீங்க" என்பான். ஆனால் எவனுமே அவனை மனுஷனாக மதிக்காததால் ஒருவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அவனும் எல்லா பொது மாத்திலும் கொசுறு அடி வாங்கிக் கொண்டிருந்தான்.

இப்படி ஒரு நண்பன் என்றால், இன்னொரு நண்பன் செல்வம் மற்றொரு வகை. இந்த ஊமைக் குசும்பு என்று சொல்வார்களே, அதற்கு Thesarus இல் தேடிப் பார்த்தால் செல்வம் என்று இருக்கலாம் என்று நினைக்கிறேன். அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் நான் இருப்பேன் என்னும் கிருஷ்ண பரமாத்மா போல, அநியாயம் நடக்கும் இடங்களிலெல்லாம் இவனும் இருப்பான். என்ன கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அநியாயம் நடப்பதற்கே இவன் தான் காரணமாக இருப்பான். ஆனால் அதைக் கண்டு பிடிப்பதற்குள் எப்படியோ தப்பி இருப்பான். இந்த இரண்டு பேரிடம் தான் நான் 3 வருடங்கள் ரூம் மேட்டாக குப்பை கொட்டினேன். 

மன்மத லீலையை வென்ற சிலர் முதலாம் ஆண்டிலேயே பெண்களின் எண் வாங்கி, "ஏய் இன்னைக்கு எங்க மெஸ் சாம்பார்ல உப்பே இல்லை தெரியுமா" என்று நாட்டிற்கு தேவையான கருத்துக்களை இரா முழுக்க பேசும் வித்தைக்காரர்களாக இருந்தார்கள். இந்த பும்பாவையும் செல்வத்தையும் வைத்துக் கொண்டு நானென்ன கமலஹாசனாகவா ஆகி விட முடியும், இல்லை என்னை வைத்துக் கொண்டு அவர்கள் தான் ஜேம்ஸ் பாண்ட் ஆகி விட முடியுமா? கடைசி வரை "செய் அல்லது செத்து மடி என்றார் நேதாஜி, படி அல்லது பன்னி மேய் என்கிறார் என் பிதாஜி! ஹி ஹி ஹி" என்பன போன்ற மொக்கை ஜோக்குகளை எங்களுக்குள் பார்வார்ட் செய்து கொண்டிக்கும் படியான வாழ்க்கையைத் தான் கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகளில் வாழ முடிந்தது.

ஆனால் முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும், முயலாமை தான் வெல்வது என்பது பழமொழி அல்லவா. அதனால் நாங்களும் முயற்சி செய்ய ஆரம்பித்தோம். ஒரு நாள் விடுதியில் நானும் செல்வமும் எப்படிடா பயப்படாம ஒரு பொண்ணுகிட்ட காதலை சொல்வது என்கிற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோம். (காதலிப்பதற்கு பெண்ணெல்லாம் தயாராக இல்லை. இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் என்ன செய்ய என்பதான மேம்பட்ட சிந்தனைகள் ஓடிய காலம் அது) பல்வேறு முத்தான சிந்தனைகளை உதிர்த்து ஆழ்ந்த யோசனையில் இருந்த போது, நமது திருவாளர் பும்பா அரக்க பரக்க ஓடி வந்தான். மச்சி டேய், உங்களுக்கு ஒண்ணு தெரியுமாடா என்று மூச்சிரைக்க நின்றான். சரி நாங்களும் பெண்களிடம் பயப்படாமல் பழகுவதற்கு  எதோ புதிதாக யோசனை கண்டுபிடித்து விட்டான் போல என்று நினைத்து, சரிடா, பதட்டப்படாம சொல்லு என்றோம். "மெஸ்ல உருளைக்கிழங்கு சிப்ஸ் எல்லாருக்கும் ஒரு தடவ தான கொடுப்பாங்க, நான் இன்னைக்கு ஏமாத்தி 2 தடவை வாங்கிட்டேனே, எப்படி பாத்தியா" என்றான் வாயெல்லாம் பல்லாக. எங்களுக்கோ செம காண்டு, "உங்க வாழ்க்கைக்கும் சேர்த்து தான் யோசிச்சுட்டு இருக்கோம் சென்றாயன். இப்படி சோறு சோறுனு அலையறீங்களே" என்று கோவமாக அடிக்க முற்பட்டோம். காட்டுப்பன்னி அல்லவா, கடைசியில் அவன் தான் எங்களைப் போட்டு அடித்தான்.

ஒரு வழியாக பல்வேறு யோசனைகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பில் ஜெபா மிஸ் சொல்லிய 4 பசுக்களும் ஒரு சிங்கமும் நீதிக் கதை தான் எங்களுக்கு கை கொடுத்தது. (எனவே தான் மாணவர்களே நீதிக் கதைகளை நீங்கள் கருத்தூன்றி படிக்க வேண்டும்) தனியாக ஒரு பெண்ணிடம் சென்று காதலை சொல்வதால் தானே பயம். மூன்று பேரும் மொத்தமாக சென்று "வீ லவ் யூ" என்று சொன்னால் தைரியம் வந்து விடும் அல்லவா என்கிற முத்தான யோசனை உதித்தது. உலகத்திலேயே வேறு எவருக்கு இப்படி ஒரு யோசனை தோன்றி இருக்காது. நம் எல்லோருக்கும் பிடித்த பெண்ணிடம் சென்று மொத்தமாக "வீ லவ் யூ" என்று சொல்லுவோம். அந்த பெண் யாரை ஒத்துக் கொள்கிறாளோ மற்றவர்கள் விட்டுக் கொடுத்து விட வேண்டும் என்கிற கண்றாவியான ஜெண்டில்மேன் ஒப்பந்தம் வேறு. சரி எல்லாம் தயராகி விட்டது. இவ்வளவு விஷயங்கள் பார்த்து பார்த்து யோசித்த நாங்கள், ஒரு சின்ன விஷயத்தை மட்டும் மறந்து விட்டோம். எங்கள் காதலை சொல்ல ஒரு பெண் இல்லை. கிடைத்திருந்தால் அன்றே எங்கள் வாழ்வில் வசந்தம் மலர்ந்திருக்கும். (இப்படியெல்லாம் எங்களை நாங்களே தேற்றிக் கொள்வது தான், வாசகர்கள் கண்டு கொள்ளக் கூடாது). காதலைச் சொல்லும் பெண்ணை மூன்று பேருக்கும் பிடித்திருத்திருக்க வேண்டும் என்பது தான் ஒரே விதி. அப்படிப்பட்ட பெண்ணிற்கு நாங்கள் எங்கே போவது. வடிவேலு காத்து காத்து, காத்துக்கு நான் எங்கடா போவேன் என்று தேடுவதைப் போல, நாங்களும் எங்கள் கல்லூரியிலேயே சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தோம். கடவுள் இருக்கிறான் குமார் என்பதைப் போல தான் அந்த சம்பவம் நடந்தது......

(தொடரும்)


கதையின் இறுதிப் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும். 

புதன், 18 ஜூலை, 2018

பாரத் ரத்னா - பகுதி 2

(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

பகுதி ஒன்றைப் படிக்க இங்கே சொடுக்கவும்

முன்கதை சுருக்கம்:

(ஹாக்கியில் சேர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்கிற பாதை மிகக் கடினமாக இருந்ததால், கல்லூரி தமிழ் மன்றத்தில் சேர்ந்து பிற கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தேன். வீட்டில் சண்டை போட்டு காசு வாங்கி தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள சென்றேன். 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் முதல் 2 நாட்கள் எந்த பரிசும் கிடைக்கவில்லை. வீட்டிலோ போட்டியில் ஜெயித்து உங்கள் காசை கொடுத்து விடுகிறேன் என்கிற என் வாய்ச்சவடால் ஞாபகம் வந்தது)

மூன்றாம் நாள். இறுதி நாள். 2 போட்டிகள். குறும்பட போட்டி ஒன்று, மேலும் மௌன மொழி என்று சொல்லபடுகிற Dumb Charades. இதில் குறும்பட போட்டிக்கு ஒரு படம் தயாரித்து இருந்தோம். அதை அனுப்பி வைத்தோம். அது ஒரு தனி கிளைக் கதை. பிறகு சொல்கிறேன். இந்த மௌன மொழி போட்டி மிக சாதரணமாக இருக்காது. வெறும் திரைப்பட தலைப்புகள் மட்டுமல்லாது பழமொழிகள், அரசியல் ஆளுமைகள், இலக்கிய புத்தகங்களின் பெயர்கள் என்று வித்தியாசமாக இருக்கும். அதை ஒருவர்  பேசாமல் நடிக்க, அணியில் இருக்கும் மற்ற இருவர் கண்டுபிடிக்க வேண்டும். இது பல்வேறு சுற்றுகளாக ஒவ்வொரு சுற்றுகளிலும் வித்தியாசமான விதிகளோடு இருக்கும். இதற்கு அணியில் இருக்கும் மூவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களும் மிகுந்த தயாரிப்பிற்கு பிறகு வந்திருப்பார்கள். ஒவ்வொரு அணியும் அவர்களுக்குள்ளாகவே சைகை மொழி வைத்திருப்பார்கள். எனவே இது ஒரு சாதாரண போட்டி என்று கடந்து விட முடியாது.     

நானும் என்னோடு சண்முகன், திலீபன் என்ற இருவரும் ஒரு அணியாக உள்நுழைந்தோம். நாங்களும் சைகை மொழி, மற்ற தயாரிப்புகள் என தயாரக தான் சென்றோம். இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அணிகளில் எங்கள் அணியும் ஒன்று. மொத்தம் 2 பரிசுகள் தான். இது தான் கடைசி போட்டி கூட. இதில் வென்றால் தான் உண்டு. ஒவ்வொரு சுற்றாக நடந்து வந்தது. நாங்களும் சளைக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கண்டுபிடித்துக் கொண்டு வந்திருந்தோம். ஒரு சுற்றில் ஒரு கேள்வியைத் தவற விட்டு, இரண்டாம் இடம் வந்து விட்டோம். எங்களைப் போலவே இன்னொரு அணியும் இரண்டாம் இடத்தில் வந்திருந்தார்கள். இறுதியாக பழமொழி சுற்று வந்தது. அணியில் இருக்கும் ஒருவரிடம் பழமொழி ஒன்றை காண்பிப்பார்கள். அவர் அங்கிருக்கும் கரும்பலகையயில் அந்த பழமொழியை வரைய வேண்டும். எண்களோ, எழுத்துகளோ பயன்படுத்தக் கூடாது. 3 நிமிடத்தில் 2 பழமொழிகளை வரைந்து விட்டு அவர் சென்று விட வேண்டும். அணியில் இருக்கும் மற்ற இருவர் அதன் பிறகு வந்து அவர் வரைந்திருக்கும் பழமொழி என்ன என்று சொல்ல வேண்டும். இதில் ஒரே ஒரு வாய்ப்பு தான். வரைந்தவர், ஒரே முறை வரைந்த பின் சென்று விடுவார். அணியில் மற்ற இருவரும் பதில் சொல்லும் வரை அவரைக் காண இயலாது. 

எங்களோடு இரண்டாம் இடத்தில் இருந்த அந்த அணி முதலில் சென்றது. அந்த அணியின் நபர் வரைந்து கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களில் இருந்த அந்த அணியின் நண்பர்கள் சிலர் அது என்ன பழமொழி என யூகித்து அவர்கள் அணியில் இருந்த மற்ற இருவருக்கும் ரகசியமாக சொல்லி விட்டார்கள். இதை நாங்கள் மற்றும் பார்வையாளர்களில் சிலர் பார்த்து விட்டோம். போட்டி நடத்துபவரிடம் சென்று இது முறையல்ல, அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என முறையிட்டோம். ஆனால் அந்த அணியோ எங்களைப் பார்த்து, இவர்களும் இரண்டாம் இடத்தில் இருப்பதால் எங்களை வீழ்த்த பொய் சொல்கிறார்கள் என சாதிக்க ஆரம்பித்தார்கள். அடப்பாவிகளா, இப்படி அபாண்டமா பொய் சொல்றாங்களே, உலகத்துல எல்லாருமே உன்ன மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்கடா சிவா என மனதிற்குள் நொந்து கொண்டேன். ஆனால் போட்டியை நடத்தும் நடுவர்கள், இது தேவையில்லாத பிரச்சனை, அதனால் கண்டுகொள்ள வேண்டாம். போட்டி தொடர்ந்து நடக்கும் என அறிவித்தார்கள். எதிர்பார்த்தது போலவே அந்த அணி பழமொழி சுற்றில் 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டார்கள். எங்களுடைய முறை வந்தது. நண்பன் திலீபன் வரைந்து விட்டு சென்றான். நானும் சண்முகனும் வெகு சுலபமாகவே அந்த 2 பழமொழிகளையும் கண்டறிந்து விட்டோம்.

இறுதி சுற்று முடிந்த பின்பும் இரண்டாம் இடத்தில் 2 அணிகள் இருப்பதால் மேலும் ஒரு டை-பிரேக்கர் சுற்று வைப்பது என நடுவர்கள் முடிவெடுத்தார்கள். ஒரே கேள்வி இரு அணிகளுக்கும். யார் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர். இரண்டு அணிகளுக்கும் ஒரே கேள்வி ஆதலால், முதலில் ஒரு அணிக்கு கேள்வி தரப்படும். அப்பொழுது மற்ற அணி வேறு ஒரு நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும். (கைப்பேசிகள் எதுவும் இல்லாமல், போட்டியாளர்கள் தவிர வேறு யாரும் இல்லாமல் என்று கெடுபிடி). ஏற்கனவே இன்னொரு அணியின் மீது பிராது இருந்ததால் அவர்களே முதலில் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் நடுவரின் கண்காணிப்பில் வேறொரு இடத்தில் நேர்மையாக இருந்து கொள்கிறோம் என்றோம். நடுவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். நாங்கள் வெளியில் சென்று விட்டோம். சில நிமிடங்கள் கழித்து எங்கள் அணியை அழைத்தார்கள். முதல் அணி எவ்வளவு நேரத்தில் கண்டறிந்தார்கள் என்று கூட தெரியாது. மேடை நோக்கி சென்றோம். மொத்த அரங்கமும் அமைதியாக எங்கள் அணியையே பார்த்துக் கொண்டிருந்தது. எங்களுக்குள் லேசான பதற்றம். சண்முகன் நன்றாக நடிப்பான். நான் நன்றாக யூகிப்பேன் என்பதால், அவனே நடிப்பது என முடிவானது. போட்டி ஆரம்பம் ஆனது. சண்முகன் முதலில் தன் மொத்த உடம்பையும் விரலால் காட்டினான். எங்கள் சைகை மொழியில் அதற்கு இந்தியா என்று பொருள். நான் இந்தியா என்று கத்தினேன். அப்படியே விரலை எடுத்து தனது இடது காலுக்கு கீழே காட்டினான். தமிழ்நாடா என்றேன். அதற்கும் கீழே என சைகையால் காண்பித்தான். இலங்கையா என்றேன். ஆம் என தலையசைத்து, துப்பாக்கி போல விரல்களை காண்பித்தான். விடுதலைப் புலிகள் பிரபாகரன் என்றேன். இல்லை என தலையசத்து அறிவு என குறிப்பிடும் விதமாக மூளையைக் காட்டினான். ஆண்டன் பாலசிங்கம் என்று கத்தினேன். ஆம் என ஓடி வந்து என்னை அப்படியே அலேக்காக தூக்கி இருமல் மருந்து பாட்டிலை குலுக்குவது போல குலுக்கினான். மொத்த அரங்கமும் எழுந்து நின்று கை தட்டியது. அந்த அணி 1 நிமிடம் 30 விநாடிகள் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்டதை நாங்கள் 25 வினாடிகளில் கண்டறிந்து விட்டோம். வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி போல மொத்த அரங்கமும் எங்களுக்காக கை தட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

போட்டியை முடித்து விட்டு ஆனந்த கண்ணீரோடு வெளி வந்த போது என் நண்பன் ஒருவன் ஓடி வந்து, 'டேய் நீங்க எடுத்த ஷார்ட் பிலிமுக்கு இரண்டாவது இடம் கிடைச்சிருக்குடா என்றான். Icing on the cake என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதை அன்று தான் உணர்ந்தேன். (அந்த குறும்படம் யூட்யூபில் உள்ளது. ஒரு வேளை உங்கள் உயிர் மீது ஆசை இல்லை என்றால் தைரியமாக லிங்க கேட்கவும். கொடுக்கிறேன்) ஒரு வழியாக பரிசு வாங்கி விட்டேன். இனிமேல் வீட்டில் இன்னும் தைரியமாக வாய்ச்சவடால் விடலாம். சும்மாவே என் வாய் நீளம் இனி கேட்க வேண்டுமா :)

மௌன மொழி போட்டிக்கு இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் கிடைத்தது. ஆளுக்கு 700 ரூபாய். இது ஒலிம்பிக்கும் இல்லை. நான் வென்றது தங்கமும் இல்லை. ஆனால் பரிசின் மதிப்பை ரூபாயில் கணக்கிட முடியுமா என்ன. ஒரு வேளை எனது அந்திம காலத்தில் என் வாழ்வில் நடந்த மிகுந்த மகிழ்ச்சியான தருணங்களை அசை போடும் பொழுது, இந்த 700 ரூபாய் பரிசும் நிச்சயமாக அதில் இருக்கும். என்னைப் பொறுத்த வரை அது தான் எனக்கு பாரத் ரத்னா :) 

வெள்ளி, 13 ஜூலை, 2018

பாரத் ரத்னா - பகுதி 1



(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஏழாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

முதலாம் ஆண்டு கல்லூரி மற்றும் விடுதியில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனால் இரண்டாம் ஆண்டில் அதற்கு நேர் எதிர். அவிழ்த்து விட்ட கழுதைகள் நாங்கள். பரீட்சைக்கு முந்தின நாள் படித்தாலே பாஸ் ஆகி விடலாம் என்று தெரிய ஆரம்பித்ததால் படிக்கிற பழக்கம் மறைந்து விட்டது. ஆனால் 5 மணியிலிருந்து இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதற்கு என்ன செய்ய? அப்போது தான் விடுதியில் சில அறைகளில் கணினி வர ஆரம்பித்தது. எதோ கோட் அடித்து பில்கேட்ஸை மூலையில் உட்கார வைக்கிற அளவுக்கு பேசி ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து அடம் பிடித்து கணிணி வாங்கிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல கோட் அடிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் அது பயன்பட்டது. விளையாட, படம் பார்க்க (பக்தி படங்கள் உட்பட) என அதில் கொஞ்சம் பொழுது போனது. இருந்தாலும் ஏதாவது உபயோகமாக செய்யலாமே என்ற குற்ற உணர்வு குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. சரி ஏதேனும் விளையாட்டுகளில் சேரலாம் என்று முடிவு செய்து நானும் சில நண்பர்களும் முடிவு எடுத்தோம்.

சரி தேசிய விளையாட்டான ஹாக்கியில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என முடிவு செய்து, புதிய ஷூ எல்லாம் வாங்கி முதல் நாள் பயிற்சிக்கு சென்றோம். சென்ற உடனே ஹாக்கி மட்டையை கையில் கொடுத்து கோல் அடித்து, அப்படியே இந்திய அணியில் இடம் பிடித்து, ஒரு உலக கோப்பை வாங்கி, அப்படியே ஒரு பாரத் ரத்னா வாங்கி விடலாம் என்று கனவு கண்டிருந்த போது, அதில் மண்ணள்ளி போட்டு, 'போய் கிரவுண்ட நாலு ரவுண்டு சுத்திட்டு வாங்க, அப்புறம் பாக்கலாம்' என்றார் சீனியர் அண்ணண் என்கிற எங்கள் பயிற்சியாளர். என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காக, நான் எப்படி இருப்பேன் என்று கூறுவது இந்த இடத்தில் அவசியம். ஒரு 2HB பென்சிலை எடுத்து முழு நீள வெள்ளைத் தாளில் ஒரு கோடு வரைந்தால் எவ்வளவு ஒல்லியாக இருக்குமோ அதை விட ஒல்லியாக இருந்தேன் கல்லூரி படிக்கும் போது. யாராவது கேட்டால், காந்தியே ஒல்லியா தாண்டா இருந்தார், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கலியா என்று வாய் விட்டுக் கொண்டிருந்தேன். நமக்கு வாய் தானே எமன். சரி பயிற்சிக்கு வருவோம், 4 ரவுண்டு தான, முடிச்சுட்டு ஹாக்கி மட்டையை தூக்குறோம், பாரத் ரத்னா வாங்குறோம் என்று ஓட ஆரம்பித்தேன். 2 ரவுண்டுக்கு மேல் நாக்கு தள்ளியது. இருந்தாலும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்கிற பெரியோரின் வாக்குக்கிணங்க ஓடி முடித்து மேலும் சில பல உடற்பயிற்சிகளையும் செய்து முடித்தேன். இப்படியாக ஓட்டம், உடற்பயிற்சி என்று சில வாரங்கள் எங்களுக்கு தண்ணி காட்டி விட்டு, கடைசியாக தான் ஹாக்கி மட்டையைக் கையில் கொடுத்தார்கள். சரி இனிமேலாவது வாழ்க்கையில் நட்சத்திர ஜன்னலில் பாட்டு வந்து விடும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது தான், ராங் சைடில் சென்று சீனியர் அண்ணாவிடம் ஹாக்கி மட்டையில் ஒரு அடி வாங்கினேன். வாழ்க்கைனா சில பல அடிகள் விழத்தான் செய்யும் என்று கடந்து போக முடியவில்லை, என்னா வலி! 

இருந்தாலும் பாரத் ரத்னா கனவு கலையக்கூடாது என்பதால் தொடர்ந்து பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தோம். வருடாந்திர விளையாட்டுப் போட்டிகளில் ஹாக்கி சாம்பியன் பட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டிலிருந்தும் ஒவ்வொரு அணி, மற்ற அணியுடன் மோத வேண்டும். இரண்டாம் ஆண்டு அணியில் வேற ஆள் கிடைக்காததால் நானும் என் நண்பர்கள் சிலரும் அணியில் சேர்க்கப் பட்டோம். எங்களுக்கான முதல் ஆட்டம் நான்காம் ஆண்டு சீனியர்கள் அணியுடன். ஆட்டத்திற்கு முந்தின நாள் எங்கள் அணியின் சின்னையா எங்களிடம் வந்து 'டேய் மச்சி ஒரு வேளை நாம நாளைக்கு ஜெயிச்சுட்டோம்னா, சீனியர்லாம் நம்மளைஅடிக்க மாட்டாங்கல்ல" என்றான் அப்பாவியாக. எங்கள் அணியின் கோல் கீப்பரிடம் சென்று "மச்சி ஒருவேளை பெனால்டி வரைக்கும் வந்திடுச்சுனா, அதுக்குலாம் பிராக்டிஸ் பண்ணிட்டல" என்றான். இதே போல பேசுவதற்கு தமிழில் ..... கொழுப்பு என்று ஒரு அருமையான பதம் உள்ளது. சரி ஆட்டத்திற்கு வருவோம், ஆட்டம் தொடங்கியதிலிருந்து மரண அடி, வேறு யாருக்கு எங்களுக்கு தான். ஒவ்வொருத்தனும் ராங் சைடில் சென்று அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல எங்கள் சின்னையா D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்து விட்டு கோல் கோல் என்று கத்திக் கொண்டிருந்தான். (D பாக்ஸ்க்கு வெளியே நின்று கோல் அடித்தால் அது செல்லாது. எங்களுக்கு அது கூட தெரியவில்லை). ஒரு வலியாக (வலி - பிழையன்று) 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினோம். சரி இனிமேல் ஹாக்கி நமக்கு ஒத்து வராது, பாரத் ரத்னா வேறு வழியாகவும் சென்று வாங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

அப்போது தான் கல்லூரியில் தமிழ் மன்றம் துளிர் விட ஆரம்பித்தது. ஒவ்வொரு செவ்வாயும் தமிழ் மீது ஆர்வம் கொண்ட சீனியர்கள் 5 மணிக்கு தமிழ் மன்ற கூட்டம் நடத்தினார்கள். சரி நமக்கு தான் தமிழ் மீது கொஞ்சம் ஆர்வம் உள்ளதே என செல்ல ஆரம்பித்தேன். புதுமைப்பித்தன் கதை வாசிப்பு, இலக்கிய விவாதம் என பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார்கள். நம்ம பாடிக்கு இது தாண்டா சரி என்ற முடிவோடு தொடர்ந்து கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்திலும், பிப்ரவரி மாதம் தஞ்சை சாஸ்திரா பல்கலை கழகத்திலும் கலை இலக்கிய போட்டிகள் நடத்துவார்கள். கல்லூரியில் இருந்து தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், நுண்கலை மன்றம் சார்பாக மாணவர்கள் சென்று வருவார்கள். அப்படியாக மூன்றாம் ஆண்டு திருச்சி சென்ற ஜோதியில் நானும் ஐக்கியமானேன்.

அனுமதி கட்டணம், போய் வர பேருந்து செலவு, தங்குவதற்கான கட்டணம் என்று ஒரு செலவு வரும். சிங்கிள் டீக்கே சிங்கி அடித்துக் கொண்டிருந்த காலம் அது. கல்லூரியில் இருந்து ஒரு சிறு துரும்பை கூட அசைக்க மாட்டார்கள். போட்டிகளுக்குக் கூட OD (On-Duty) கிடைக்காது. விடுப்பு எடுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஊமை நாடகத்தில் நடிக்க அனவரும் ஒரே மாதிரி ஆடை அணிய வேண்டும் என்பது விதி. அதற்கு டீ. ஷர்ட் அடிக்க கூட காசில்லாததால், அனைவரிடமும்் இருக்கிற கருப்பு டீ ஷர்டை (அதில் எந்த டிசைன் போட்டிருந்தாலும்) உள் வெளியாக திருப்பி அதை அணிந்து நடித்துக் கொண்டிருந்தோம் என்றால் எங்கள் பட்ஜெட்டை பார்த்துக் கொள்ளுங்கள். எனவே இப்படியாக செல்லும் போட்டிகளில் எப்படியாவது வென்று போட்ட காசை எடுக்க வேண்டும் என்ற வெறி இருக்கும். 

செப்டம்பர் மாத திருச்சி போட்டிக்கு எப்படியோ வீட்டில் கெஞ்சி கூத்தாடி காசு ஏற்பாடு செய்து போய் விட்டு வந்தேன். கொடுத்த காசுக்கு எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது என்ற விதிமுறை எங்களுக்கு உண்டு. ஆனால் விதி பாருங்கள், அந்த வருடம் நடந்த எந்த போட்டியிலும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. ராமசாமிக்கு கொடுத்த காசு ஊஊ என்பது போல போட்ட காசு எல்லாம் கோவிந்தா. என்னுடன் வந்த சீனியர்கள் பலர் பரிசு பெற்றிருந்தார்கள். "கவலைப்படாதடா, முதல் தடவ தான உனக்கு, எனக்கும் முதல் தடவலாம் ஒண்ணும் கிடைக்கல, அடுத்த போட்டில பார்த்துக்கலாம்" என்று ஆறுதல் கூறினார்கள். ஹாக்கியைப் போல இதிலும் முதல் தோல்வி கண்டவுடன் ஓடி விட விருப்பம் இல்லை. உண்மையாகவே இந்த மன்றமும் அதன் செயல்பாடுகளும் பிடித்து இருந்ததால், தொடர்ந்து கூட்டங்களுக்கு சென்று கொண்டிருந்தேன்.

அடுத்ததாக பிப்ரவரி மாதம் சாஸ்திரா பல்கலைகழகத்தில் நடைபெறும் போட்டிகள். இம்முறையும் போன் செய்து வீட்டில் பணம் கேட்க, நல்ல அர்ச்சனை கிடைத்தது. நல்ல வேளை போனிலேயே செருப்பால் அடிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்னும் வரவில்லை. "அவன படிக்கிறதுக்கு அனுப்புனோமா இல்ல இப்படி ஊர் ஊரா போட்டி போட்டினு திரிய அனுப்புனோமா, ஒழுங்கா படிச்சு கேம்பஸ் இண்டர்வியூல செலெக்ட் ஆக சொல்லு, இந்த போட்டிலாம் அப்புறம் பார்த்துகலாம்" என்று அப்பாவிடமிருந்து உத்தரவு. இள ரத்தம் அல்லவா, நானும் சூடாகி அம்மாவிடம் போன் செய்து, "சும்மாலாம் காசு தர வேணாம், அப்பாவ கடனா கொடுக்க சொல்லுங்க, நான் போட்டில ஜெயிச்சுட்டு வந்து காச திருப்பி கொடுத்துடறேன்" என்றேன். வாய் வாய், இந்த வாய் இருக்கிறதே! போன தடவையே ஒண்ணும் கிடைக்கல, இந்த தடவ வீட்ல வாய் வேற விட்டுட்டோம் என்று நொந்து கொண்டேன். அம்மா ஒரு வழியாக தலைமையிடம் பேசி காசு அனுப்பி விட்டார்கள். எடுத்துக் கொண்டு நானும் சிங்கம் ஒன்று புறப்பட்டதே என்று கிளம்பி விட்டேன்.

போட்டி 3 நாட்கள் நடைபெறும். வழக்கம் போல நானும் எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டேன். கவிதை போட்டியில் எல்லாம் கலந்து கொண்டு வானமோ நீலம் நீதான் என் பாலம் போன்ற அரிய கவிதைகளை எல்லாம் எழுதி வைத்து விட்டு வந்தேன். பேச்சுப் போட்டி, தமிழ் வினாடி வினா, கற்பனை, கட்டுரைப் போட்டி என முதல் 2 நாட்கள் கலந்து கொண்ட எந்த போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. லேசாக பயம் வர ஆரம்பித்தது. கூட வந்த எல்லாரும், எனது ஜூனியர் உட்பட ஒரு பரிசாவது வாங்கி விட்டார்கள். வீட்டில் வேறு வாய் விட்டு வந்தோமே, என்கிற கவலை எனக்கு. மூன்றாம் நாள். இறுதி நாள்....
(தொடரும்)

வெள்ளி, 9 மார்ச், 2018

ஒரு கதை சொல்லட்டா


(எனது கல்லூரி வாழ்வில் நடந்த சம்பவங்களை ஒரு சிறு தொகுப்பாக இணையத்தில் வெளியிடலாம் என எண்ணியுள்ளேன். அதன் ஆறாவது பகுதி இது. மற்ற பகுதிகளை இந்த லேபிளினின் கீழ் படிக்கலாம் இதில் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மையுமில்லை, அனைத்தும் புனைவுமில்லை. எது உண்மை எது புனைவு என்று நீங்கள் கேட்டால், வாத்தியார் சுஜாதா மொழியில் சொன்னால்,  Well, it depends....)

இன்று நான் உங்களுக்கு சொல்லப் போவது ஒரு கதையல்ல. இது ரத்த சரித்திரம். மனதைப் பிழியும் ஒரு டாகுமெண்டரி. படித்து முடித்தவுடன் உங்கள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வரும். எழுந்து நின்று பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கெல்லாம் ஒரு வீர வணக்கம் வைப்பீர்கள். இது போன்ற தியாகிகள் மத்தியிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உங்களுக்கு தோன்றும். அடுத்த வருட வீர தீர பராக்கிரம செயலுக்காக மத்திய அரசு வழங்கும் விருது இந்த மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைப்பீர்கள். போதும்டா மேல சொல்லு என்கிறீர்களா?

ஒரே ஒரு பத்திக்கே உங்களுக்கு போர் அடிக்கிறது அல்லவா? இதே போல பத்தி பத்தியாக 4 வருடங்கள் எழுதி பொறியியல் படிப்பில் நாங்கள் கடைத்தேறிய கதை தான் உங்களுக்கு நான் இன்று சொல்லப் போவது. நான் பள்ளி படிப்பு படித்தது தென் தமிழகத்தின் ஒரு கோடியில். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே பொறியியல் தான் என்று முடிவு செய்து விட்டேன். படிக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம் என்ற பராசக்தியின் வாக்குக்கிணங்க தமிழகத்தின் மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகள் எதுவும் எங்கள் ஊரில் இல்லை. அதனால் எப்படியும் விடுதியில் தங்கி தான் படிக்க வேண்டும் என என் மனதை அப்போதே தயார் செய்து கொண்டேன். பணிரெண்டாம் வகுப்பில் தீயாக வேலை செய்ததன் விளைவாக ஒரு அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த இடத்தில் எங்கள் கல்லூரியைப் பற்றி கொஞ்சம் பெருமை பீற்ற வேண்டி இருக்கிறது. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொறியியல் கல்வி வழங்கும் நிறுவனங்களில் எங்கள் அரசு கல்லூரியும் ஒன்று. என்ன நம்பிக்கையோ தெரியவில்லை, எனது தந்தை, பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக கிட்டதட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்க முடிவு செய்திருந்தார்கள். கல்லூரி கட்டணம் எவ்வளவு என்று என்னிடம் கேட்டார்கள். நான் ஏழாயிரத்து சொச்சம் வருகிறது என்றேன். “, மாசம் அவ்வளவு கட்டணுமா, இன்னும் ஒரு இருவதாயிரம் இடிக்கும். பாத்துக்கலாம், நான் ஏற்பாடு பண்றேன்என்றார். “ஒரு வருஷத்துக்கே அவ்வளவு தாம்பாஎன்றேன். நிச்சயமாக என்னை நம்பவில்லை. “டேய் நல்லா விசாரிச்சியா? பணம்லாம் பிரச்சனை இல்லைடா, கட்டிடலாம்என்றார். உண்மையாகவே அவ்வளவு தான் என்று நம்ப வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. விடுதி கட்டணம் பற்றி சொல்ல மறந்து விட்டேனே, விடுதி அறை கட்டணம் 302 ரூபாய், அதுவும் ஒரு வருடத்திற்கு!

ஒரு பக்கம் பெரிய செலவில்லாமல் பையனை சேர்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், பையனை பிரிய வேண்டுமே என்ற கவலை இருந்தது எனது அப்பாவிற்கு. கிட்டதட்ட 2 வருடங்களாக எனது மனதை நான் சரி செய்து வைத்திருந்ததால், இந்த பிரிவு பெரிய அளவில் என்னை பாதிக்கவில்லை. ஆனால் இது வரைக்கும் விடுதியில் தங்கி பழக்கமே இல்லை. பள்ளி படிக்கும் போதும் ஒரு துரும்பை கூட அசைத்துப் போட்டதில்லை. அதுவும் கடைக்குட்டி பையன் என்பதால் ஏகப்பட்ட செல்லம் வேறு. ஆனால் விடுதி உலகம் வேறல்லவா. இனிமேல் வாழ்க்கையில் பொறுப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்து ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என அட்டவணை எல்லாம் போட்டு வைத்திருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள், விடுதியில் சேர்ந்து முதல் ஒரு வாரம் தினம் தினம் துவைத்துக் கொண்டிருந்தேன். வர வர மாமியா கழுதை போல போனாளாம் என்ற சொலவடைக்கு இணங்க நான்காம் ஆண்டு படிக்கும் போது விடுதியில் துவைப்பதெல்லாம் இரண்டு மாதங்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்கோ ஒரு முறை என்றாகி விட்டது. அதுவும் ஊருக்கு போகும் போது அழுக்கு மூட்டையை கொண்டு சென்றால் வீட்டில் துவைத்து தேய்த்து கொடுத்து விடுவார்கள்.

இந்த மாமியா சொலவடை படிப்பிற்கும் பொருந்தும். முதலாம் ஆண்டில் வரும் முதல் பருவத்தேர்வுக்கு கிட்டதட்ட விடுதியில் எல்லோருமே பொறுப்பாக தான் படித்தார்கள். பனிரெண்டாம் வகுப்பின் தாக்கம் அது. முதலாம் ஆண்டின் இரண்டாவது பருவத்தேர்வில் தான் ஆரம்பித்தது எங்கள் கதை சொல்லும் படலம். அந்தத் தேர்வில், “Object Oriented Methodologies” என்றொரு தேர்வு இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பிரிவு மாணவர்களுக்கானது. ஒரு மென்பொருளைக் கட்டமைக்கும் போது இந்த Object oriented நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கலாம். இது தான் அதன் சாராம்சம். அந்த தேர்விற்கு படிக்க கிராடி பூச் (Grady Booch) என்றொருவர் எழுதிய புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார்கள் கல்லூரியில். நாங்களும் பொறுப்பாக அந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தோம். தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. “பூவை பூ என்றும் சொல்லலாம், புய்பம் என்றும் சொல்லலாம். நீங்கள் சொல்வது போலவும் சொல்லலாம். நான் சொல்வது போலவும் சொல்லலாம். ஏன் சொல்லாமலே கூட இருக்கலாம். சொல்லாம இருப்பதால் பூ என்ற ஒன்று இல்லாமல் போய்விடுமா, இல்லை பூவிற்கு தான் பூ என்ற பெயர் இருப்பது தெரியுமா? பூ என்ற பெயர் இல்லாவிட்டாலும் பூ என்பது பூக்கக்கூடியது தானே. பூத்தல் தான் அதன் இயல்பே, அதைப்போல மென்பொருள் தொழில்நுட்பத்தில்…….” இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல 300 பக்கங்கள். படிக்க படிக்க கடுப்பு தான் ஆகியது. இது தொழில்நுட்பம் பற்றிய பரீட்சையா அல்லது தத்துவ பரீட்சையா என்றுஎங்களுக்கே குழப்பம். இது வேலைக்கு ஆகாது, அதனால் ஒவ்வொருவரும் ஒரு ஒரு பாடம் படிப்போம் அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்போம் என்று பஞ்சாயத்தில் முடிவானது. இந்த தருணம் தான் எங்கள் பொறியியல் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம். அடுத்து வந்த 3 வருடங்களுக்கு இந்த தருணம் தான் வழிகாட்டியது. 

ஒரு வழியாக அந்த தேர்வில் கதை சொல்லி கேட்டு வகுப்பில் அனைவருமே தேர்ச்சி அடைந்து விட்டோம். அட! இவ்வளவு தானா, இதையே இனிமேல் கடைபிடிப்போம் என்று முடிவாகியது. பனிரெண்டாம் வகுப்பின் படிப்பாளி பிம்பம் இன்னும் கொஞ்சமேனும் எல்லோர் மீதும் ஒட்டி இருந்ததால், இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் பரீட்சைக்கு ஒரு பாடம் தவிர மற்ற எல்லாவற்றையும் படித்து விட்டு, அந்த ஒரு பாடத்தை கதை கேட்டு ஒப்பேற்றி விடுவோம். வகுப்பில் இருக்கும் பெண்களெல்லாம் விரலுக்கு ஒரு பேனா என வானவில் வண்ணங்களில் பேனாக்களைக் கொண்டு விடைத் தாள் முழுதும் கோலமிட்டு கொண்டிருக்க, நாங்களோ,” டேய் கட்டிலுக்கு அடில பேனா இல்லாம ஒரு ரீபில் மட்டும் இருந்துச்சு பாத்தியாஎன்று கடைசி நிமிடத்தில் தேடி, அதை வைத்தே எழுதி தேர்ச்சியும் அடைந்து கொண்டிருந்தோம்.

மூன்றாம் ஆண்டு வரும் போது கொஞ்சம் குளிர் விட்டு போய் விட்டது. மேலும் எப்படி எழுதினால் தேர்ச்சி அடையலாம் என்ற சூட்சமமும் பிடிபட்டு விட்டது. ஒருவர் மொத்தமுள்ள 5 பாடங்களில் (யூனிட்) ஒன்றை மட்டும் படித்து விட்டு, மற்ற 4 பாடங்களை கதை கேட்டு ஒப்பேற்றி விடலாம் என்ற நிலைமை வந்திருந்தது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் மேல நீ படிக்கிற இன்னொரு யூனிட் மத்தவனோடது என்ற கம்யூனிச சித்தாந்தத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. பரீட்சைக்கு முந்தின நாள் எல்லோரும் அவரவர்க்கு ஒதுக்கபட்ட அந்த ஒற்றைப் பாடத்தை படித்து விட்டு, இரவு சாப்பாட்டுக்கு மேல் கதை சொல்ல ஆரம்பிப்போம். கதை சொல்லி முடிக்க 10-11 மணி ஆகி விடும். அதன் பிறகு அப்படியே பரீட்சை எழுத முடியாதல்லவா, அதனால் கேட்ட கதையை ஒரு முறை திருப்பி பார்த்து விட்டு தூங்கி விடுவோம். காலையில் ஒற்றை ரீபிலை எடுத்துக் கொண்டு சிங்கம் ஒன்று புறப்பட்டதே பிண்ணனி இசையோடு சென்று 40 பக்கங்களை நிரப்பி விட்டு வந்தால் பாஸ். இவ்வளவு தான் செய்முறை. மேலும் ஒரு விடைக்கு வரைபடம் (diagram)  இருந்தால் நாங்கள் எல்லாம் குஷியாகி விடுவோம். வரைபடத்திற்கு பொம்மை என்று பெயரிட்டிருந்தோம். ஒரு பாடத்தை படித்து மற்றவர்க கதை சொல்லும் போதேடேய் இந்த கொஸ்டின்ல பொம்மை இருக்கு பார்த்துக்கோங்கஎன்று குறிப்பிட்டு விடுவோம். ஏனென்றால் பொம்மை போட்டு விடை எழுதும் போது, பொம்மைக்கே ஒரு அரை பக்கம் சென்று விடும். மேலும் பொம்மையின் பாகம் குறித்து, இந்த பொம்மையில் இது தான் இது, அது தான் அது என மேலும் ஒரு அரை பக்கம் ஓட்டி விடலாம். ஆக 3-4 பக்கங்கள் எழுத வேண்டிய விடையில் ஒரு பக்கம் இப்படியே சென்று விடுவோம். அதானால் பொம்மை பட கேள்விகளுக்கு எங்கள் மத்தியில் மவுசு அதிகம்.

இந்த கதை கேட்கும் படலத்தில் சில குறிப்பிட்ட விசித்திர ஜீவன்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு முறை எங்கள் வகுப்பில் இருந்த லக்‌ஷ்மணன் மற்றொரு வகுப்பு கதை கேட்கும் அமர்வில் அமர்ந்திருந்தான். “டேய் அந்த டிபார்மெண்ட் பசங்க கதைய நீ ஏண்டா கேக்குறஎன்றால், “யாருக்குடா தெரியும், கதை நல்லா இருந்துச்சு, அதான் இங்கயே உக்கார்ந்துட்டேன்என்றான். அப்படி என்றால் நாங்கள் படித்த லட்சணம் உங்களுக்கே விளங்கி இருக்கும்.

நான்காம் ஆண்டு படிக்கும் போது ஒரு விநோதமான சோதனை வந்தது. எல்லா பரீட்சைகளிலும் நான்காவது பாடம் மட்டும் மிகக் கடினமாக இருந்தது. அந்த பாடத்தை படித்து கதை சொல்ல யாருமில்லை. கடைசியாக ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல குமாரிடம் நான்காவது பாடத்தை தள்ளி விட்டு விடுவோம். (அடி வாங்க என்றே ஒரு ஜீவன் இருந்ததாக ஏற்கனவே ஒரு கதையில் கூறி இருந்தேன் அல்லவா, அதே குமார் தான்). வழக்கம் போல அவன் அந்த ஒரு பாடத்தையே படிக்க மாட்டான். அதையும் அரை குறையாக படித்து விட்டு கதை சொல்வான். “டேய் ஏண்டா எப்பவும் 4th யூனிட்ட என்கிட்டயே தள்ளி விடுறீங்கஎன்று புலம்புவான். எப்படியும் நான்காம் பாடத்திற்கான கேள்விகளை மட்டும் சரியாக எழுதி இருக்க மாட்டோம், “உன்னால தான் நாயே, நாங்க சரியா பரீட்சை எழுதலஎன்று நான்கு அடி போடுவோம். “இல்லாட்டா மட்டும் கோல்ட் மெடல் வாங்குற அளவுக்கு எழுதி கிழிச்சுருவீங்க பாருஎன்பான். “ஆமாடா எழுதி கிழிச்சிருப்போம்டாஎன்று மேலும் இரண்டு அடி விழும்.

இவன் இப்படி என்றால் மலை மாடு இன்னொரு ரகம். அநேகமாக அவனுக்கு அவர்கள் அம்மா அப்பா இட்ட பெயர் ராஜராஜன் என்று நினைக்கிறேன். ஆனால் அதெல்லாம் ஞாபகம் இல்லை. நினைவு தெரிந்த நாள் முதல் அவன் பெயர் மலைமாடு தான். இராச்சாப்பாட்டுக்கு மேல் கதை கேட்க வரும் போது நன்றாக குளித்து விட்டு, பட்டையும் விபூதியுமாக கையில் ஒரு வாட்டர் பாட்டிலோடு கதை கேட்கும் அறைக்கு வந்து விடுவான். நன்றாக ஒரு சுவர் ஓரமாக உட்கார்ந்து கதை கேட்டு விட்டு, 11 மணிவாக்கில் திருப்பி பார்க்க ஆரம்பிப்பான். பயல் 10 மணியே பார்த்ததில்லை. 11-12 எல்லாம் ரொம்ப கஷ்டம். ஆனாலும் அடுத்த நாள் பரீட்சை அல்லவா தூங்கவும் மனது வராது. “டேய் நான் ஒரு 3 மணிக்கு அலாரம் வெச்சிருக்கேன். என்னை எழுப்பி விட்ருங்கஎன்பான். 3 மணிக்கு எழுப்பி விட்டதும் கட்டிலில் ஜம்மென்று எழுந்து உட்கார்ந்து கொண்டு, புத்தகத்தை முன்னால் வைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விடுவான். எழுப்பி விடலாம் என்று நாம் அருகில் சென்றால் உட்கார்ந்து தூங்கியவாறேயாரும் என்ன எழுப்ப வேண்டாம், ஏன்னா நான் தூங்கல. நான் தூங்கல.. ஒரு 5 நிமிஷம் ரெஸ்ட்என்பான். இந்த 5 நிமிஷம் ரெஸ்ட் அப்படியே 8 மணி வரை சென்று விடும். அப்புறம் என்ன முந்தின நாள் கேட்ட கதையை வைத்து எழுத வேண்டியது தான்.

இப்படி கதை கேட்டு எழுதியதால் நாங்கள் யாரும் பொறியியல் வல்லுநர்கள் அல்ல என்று தவறான கணக்கு போட்டு விடக் கூடாது வாசக அன்பர்களே. கிட்டதட்ட என்னுடன் படித்த எல்லோருமே இன்று நல்ல வேலையில், பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். இப்போதும் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அறிவு வேறு, பரீட்சை வேறு என்ற விதிமுறைக்கு எங்கள் பொறியியல் கல்வியும் விதிவிலக்கல்ல. எல்லா கல்லூரி பரீட்சையிலும் தேர்ச்சி அடைய ஒரு சூட்சமம் உண்டு, எங்கள் கல்லூரி பரீட்சைக்கான சூட்சமத்தை நாங்கள் கண்டு கொண்டோம். அதை நாங்கள் மட்டும் பயன்படுத்தாமல் மற்ற எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து பயன் பெற செய்தோம். அவ்வளவு தான்.

ஆனால் இந்த கதை கேட்கும் படலம் மூலம் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களோடு ஒரு ஒட்டுதல் உருவாகியது. ஒரு பாடத்தை படிப்பதை விட அதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் சொல்பவர் கேட்பவர் இருவருமே பயன்பெறுவார்கள் என்கிற உண்மை உரைத்தது. எல்லாவற்றையும் விட எனது நான்கு ஆண்டு கல்லூரி வாழ்வில் எனது மனம் கவர்ந்த ஆசிரியர் யார் என்று என்னிடம் இப்போது கேட்டால் எனது நண்பர்கள் தான் என்ற பதிலே எஞ்சி இருக்கிறது.